
அண்மையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “பா.ம.க தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி நிறுவனர் பிளஸ் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் கூடிப் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதை இங்கே சொல்ல முடியாது” என தெரிவித்திருந்தார்.
ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு, பா.ம.க உள்பட தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாகவே பாமகவின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து சமாதானம் மேற்கொள்ள படையெடுத்த நிலையில் தோல்வியே மிஞ்சியது. இந்த பரபரப்பு சூழலுக்கு மத்தியில் அதிமுகவின் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டார்.

இந்த சந்திப்புக்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம். நேற்று பேப்பர் பார்த்தீர்களா? எங்கள் அகாடமி மாணவி tnpsc-ல் முதலிடம் பிடித்திருக்கிறார். அதற்காக ராமதாஸ் என்னை பாராட்டி இருந்தார். அதற்கு நன்றி கூறுவதற்காகவே அவரை சந்திக்க வந்தேன்'' என்றார்.