Skip to main content

ஆசிரியர்களே இல்லாத அரசுப்பள்ளிகள்; கூண்டோடு இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
All the teachers in government schools have been transferred

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி 1 வது வார்டு பகுதியான காசிம்புதுப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் காசிம்புதுப்பேட்டை பகுதி மட்டுமின்றி அருகில் உள்ள பேட்டைக்காடு, கரம்பக்காடு இனாம், சுக்கிரன்குண்டு பகுதியைச் சேர்ந்த 111 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 3 இடைநிலை ஆசிரியர்கள், 3 பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு 2 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் காலியானது. அதனால் அந்த காலிப்பணியிடங்களுக்கு 2 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் ஒரு பட்டதாரி ஆசிரியர் நிர்வாக காரணங்களால் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்திற்கும் பெற்றோர்கள் தரப்பிற்கும் சுமூகமான உறவு நீடிக்காத நிலை ஏற்பட்டதால் கடந்த வாரம் நடந்த கலந்தாய்வில் பள்ளி தலைமை ஆசிரியர் திருக்கட்டளை நடுநிலைப் பள்ளிக்கு இடமாறுதல் பெற்றுள்ளார்.

All the teachers in government schools have been transferred

அதே போல இன்று சனிக்கிழமை நடந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் ஒரு பட்டதாரி ஆசிரியர் கீழாத்தூர் நடுநிலைப் பள்ளிக்கும், மற்றொரு பட்டதாரி ஆசிரியரும், பள்ளியில் எஞ்சியிருந்த ஒரு இடைநிலை ஆசிரியரும் செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர். இதனால் அரசு ஆசிரியர்களே இல்லாத அரசுப்பள்ளியாக உள்ளது காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

இந்த நிலையில் திங்கள் கிழமை யார் பள்ளியை திறந்து பாடம் நடத்துவார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனால் 2 தற்காலிக இடைநிலை ஆசிரியர்களும் மழலையர் வகுப்பில் ஒரு தற்காலிக ஆசிரியரும் உள்ளனர். ஒரு பள்ளியில் பணியாற்றிய ஒட்டு மொத்த ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் இடமாறுதலில் சென்று ஆசிரியர்கள் பணியிடம் காலியாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு உடனே ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.

இதே போல, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், ஆயிங்குடி வடக்கு  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் காலிப்பணியிடங்களாக உள்ளது. பணிபுரிந்த ஒட்டு மொத்த ஆசிரியர்களும் பணிமாறுதல் பெற்று சென்றுவிட்டனர். ஒரே கல்வி மாவட்டத்தில் இரு நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத அரசுப்பள்ளிகள் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

புதுக்கோட்டையில் ரவுடி சுட்டுக் கொலை!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Trichy MGR nagar Durai incident at Pudukottai

திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை. ரவுடியான இவர் மீது 70க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லக்கூடிய வம்பன் காட்டுப்பகுதியில் துரை பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்ய சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது துரை தான் வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனால் போலீசார் தற்காப்புக்காக இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து இவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் கவுண்டர் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு திருச்சியில் ஏற்கனவே திருட்டு வழக்கிற்காக இவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்றவர் ஆவார். மேலும் காவல் ஆய்வாளார் உள்ளிட்ட 5 காவலர்கள் துரை தாக்கியதில் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Archaeological training for government school teachers

பள்ளிகள் தோறும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை தொடங்க மதுரையில் அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் வளர்ப்பதற்காகவும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள  உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. 

இதை மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும்  செயல்படுத்துவதற்காக இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு களப்பயணத்துடன் கூடிய ஒருநாள் சிறப்புப் பயிற்சி கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இணை இயக்குநர் ஜெயக்குமார் தலைமையில் செக்கானூரணி  அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சொ.சாந்தலிங்கம் தொல்லியல், அகழாய்வு, நாணயவியல், கல்வெட்டியல் பற்றியும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பள்ளி மாணவர்களிடம்   தொல்லியலில் ஆர்வத்தை உருவாக்குவது, பள்ளியில் நடத்தப்படவேண்டிய தொல்லியல் நிகழ்வுகள் பற்றியும் பேசினர். பின்னர் களப்பயணமாக கொங்கர் புளியங்குளம் மலைக்குகையின் விளிம்பில் உள்ள 3 தமிழி கல்வெட்டுகளை ராஜகுரு படித்துக் காட்டி விளக்கமளித்தார். இரு கல்வெட்டுகளில் மலை, பொன் ஆகியவற்றின் குறியீடுகள் இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் வியந்தனர். 

இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்கி மாணவர்களுக்கு தொல்லியல் குறித்து கற்றுத்தர உள்ளனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்வி அலுவலர் சொ.சவகர், பள்ளித் தலைமையாசிரியர் வ.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்தனர். இப்பயிற்சியில் 46 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.