Skip to main content

‘இந்தியன் 2’; கமலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Court warns the crew of 'Indian 2'!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வருகிறது. இப்படம், வருகிற நாளை (12-07-24) வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் சித்தார்த், விவேக், மனோபாலா, பிரியா பவானி சங்கர், ரகுல் பீரித் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தின் புரோமோஷன் வேலைகளை படக்குழு வேகமாக செய்து வருகிறது. அந்த வகையில், சென்னை, மும்பை என சில இடங்களில் இந்தியன் 2 படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இதற்கிடையில், இந்தியன் 2 படத்திற்கு தடை கோரி ராஜேந்திரன் என்பவர் மதுரை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மஞ்சவர்ம தற்காப்பு கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமினுடைய ஆசானாக இருக்கக்கூடிய ராஜேந்திரன் அளித்த அந்த மனுவில், ‘கடந்த 1996ஆம் ஆண்டில் இந்தியன் படத்தின் முதலாம் பாகம் தயாரித்த போது கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து என்னிடம் ஆலோசித்து படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு உரிய கிரெடிட்டை எனக்குப் படக்குழு கொடுத்தது. ஆனால், இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து என்னிடம் எந்த ஆலோசனையும் படக்குழு நடத்தவில்லை. எனவே, இந்தியன் 2 படத்தை திரையரங்கு, ஓ.டி.டி என எந்தத் தளங்களிலும் வெளியிடக்கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செல்வ மகேஸ்வரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த வழக்கு குறித்து பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும்’ என்று கோரினார். அதற்கு நீதிபதி செல்வ மகேஸ்வரி, ‘இந்தியன் 2 படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனால், விரைவாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த விசாரணையை இன்று  ஒத்திவைத்தார். மேலும், இந்த வழக்கில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், மற்றும் கமல் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும், அப்படி ஆஜராகாவிட்டால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறபிக்கப்படும் என்று படக்குழுவுக்கு நீதிமன்றம்  எச்சரிக்கை விடுத்தது. 

சார்ந்த செய்திகள்