Skip to main content

'திக்கற்ற காட்டில் நின்றபோது கை கொடுத்துத் தூக்கிவிட்டவர் கலைஞர்' - திருமாவளவன் பேச்சு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Thirumavalavan

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள நேமூர் என்ற இடத்தில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மூர்த்தி ஆகியோருடன் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது திருமாவளவன் பேசுகையில், 'திக்கற்ற காட்டில் விட்டதைப் போல் அரசியல் களத்தில், தேர்தல் களத்தில் நாம் நின்று கொண்டிருந்த பொழுது நமக்கு கை கொடுத்து தூக்கி நிறுத்தியவர் கலைஞர். அதிமுக அப்பொழுது நம்மை கண்டு கொள்ளவில்லை. ஒப்பந்தம் முறிந்து போனது. சந்திப்பதற்கு கூட ஜெயலலிதா அம்மையார் உடன்படவில்லை. நானும் ரவிக்குமாரும் போயஸ் தோட்டத்திற்கு போய் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து விரக்தியில் வெளியேறிய நிலையில் அந்த தகவலை அறிந்த கலைஞர் தொலைப்பேசியில் என்னை அழைத்து அரவணைத்துக் கொண்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 8 சதவீத ஓட்டு வாங்கி காட்டிய பிறகுதான் அதிமுக கூட்டணியில் சேர முடிந்தது. விடுதலை சிறுத்தைகள் அப்படி தனித்துப் போட்டியிடவில்லை; எத்தனை சதவீதம் வாக்கு வங்கி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவில்லை; தமிழ்நாடு முழுக்க நாம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை ஆனாலும் கலைஞர் 2009-இல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை கொடுத்தார். இரண்டு நாடாளுமன்றத் தொகுதி என்பது 12 தொகுதிகள். இதெல்லாம் சாதாரணமான ஒரு முடிவல்ல. இதெல்லாம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கிடைக்கும் வாய்ப்பு கிடையாது. எல்லோரும் தனது சொந்தக் காலில் நின்று குட்டிக்கரணம் போட்டு சாதித்து காட்டிய பிறகுதான் இந்த 20, 30 ஆண்டுகளில் கூட்டணியிலேயே சேர முடிந்தது. அது மட்டுமில்லாமல் நாங்கள் தனிச் சின்னத்தில் நின்று அங்கீகாரம் பெற விரும்புகிறோம் என்று சொன்னபோது அதற்கும் வாழ்த்து சொன்னவர் கலைஞர்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பட்டியலின மக்களுக்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்” - திருமாவளவன்

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
 Thirumavalavan speech at amstrong funeral

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன் தினம்(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல், பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகல், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வருகையையொட்டி பெரம்பூர், செம்பியம் பகுதியில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசினார். அப்போது அவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை என்பது கோழைத்தனமான படுகொலை. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்களும் இந்த கொலையை கண்டித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஒட்டுமொத்த தலித் அரசியலுக்கு ஏற்பட்ட பேரிழப்பு. பெளத்தம் தான் நமக்கான மாற்று அரசியல் என்பதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தி வந்தார். எந்த பதவி ஆசையும் இல்லாமல் அம்பேத்கரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங்கை இழந்தது பட்டியலின மக்களுக்கான அரசியலுக்கு நேர்ந்த பேரிழப்பு. 

ஆம்ஸ்ட்ராங் மிகவும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மிகக் கொடூரமான கொலை சென்னையில் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் படுகொலைகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது. ஆம்ஸ்ராங்க் கொலையை அரங்கேற்றிய கூலிப்படைகளை யாரென்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கைப் படுகொலை செய்திருக்கிறார்கள். உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்களுக்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். பட்டியலின மக்களுக்கான தலைவர்களுக்குப் பாதுகாப்பைத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். அவருடன் இயக்குநர் பா.ரஞ்சித் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

“ஆம்ஸ்ட்ராங்கிற்காக ஆங்காங்கே பகை எழுந்து இருக்கிறது” - தொல்.திருமாவளவன்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Thirumavalavan said that Animosity is brewing here and there for Armstrong

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே, பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளன் எம்.பி., “பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்திற்குள் அவரது உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதனை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

சரண் அடைந்தவர்களை  கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது. உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். பொதுமக்களுக்கான பிரச்சனையில் தலையிடுபவர் அதற்காக அவருக்காக ஆங்காங்கே பகை எழுந்து இருக்கிறது. அதற்குரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை அது அதிர்ச்சி அழிக்கிறது.

தமிழ்நாட்டில் பட்டியலின இளைஞர்கள் குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது. இன்று ஒரு அரசியல் தலைவர் அவரது இல்லத்தின் அருகிலேயே கொல்லப்பட்டிருக்கிறார். இது காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். கூலிப்படைகளை சாதியவாதி கும்பலை கொலைகார கும்பலை அடையாளம் கண்டு அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் இதனால் களங்கம் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.