![Ramadas charged with sedition! MLA Revenge!](http://image.nakkheeran.in/cdn/farfuture/mL2ZRX4Wig-KujDFgIz-0B2u3qeSnfi-aRfPp_xvzTU/1644213682/sites/default/files/inline-images/Ramadoss%20in_41.jpg)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வேட்புமனுதாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்றது. சனிக்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். இன்று (7ஆம் தேதி) வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (6ஆம் தேதி) பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
![Ramadas charged with sedition! MLA Revenge!](http://image.nakkheeran.in/cdn/farfuture/EUfDGXCGBbgLT9auE_32jqhOqWCUVULNY0E8e27Fz5c/1644213702/sites/default/files/inline-images/th-1_2692.jpg)
இந்நிலையில், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தக்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தும், பரசுராமன் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “மரியாதைக்குரிய பாமக நிறுவனர் அய்யா மருத்துவர் ராமதாஸ் அவர்களே, வேலூர் மாநகராட்சி 24 வார்டு பாமக வேட்பாளர் பரசுராமனை யாரும் மிரட்டவுமில்லை, கடத்தவுமில்லை, மாறாக அந்த 24 வார்டில் அவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால், எங்களை நேரில் சந்தித்து எங்களுக்கு சால்வை அணிவித்து திமுகவில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆகவே தனக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக் கொணாடார். அது திமுக நிர்வாகிக்கு ஏற்கனவே ஒதுக்கிவிட்ட காரணத்தை அவரிடம் கூறிவிட்டோம். இதற்கான ஆதாரமும் இருக்கிறது.
மரியாதைக்குரிய பாமக நிறுவனர் அய்யா மருத்துவர் திரு.@drramadoss அவர்களே வேலூர் மாநகராட்சி 24 வார்டு பாமக வேட்பாளர் திரு பரசுராமன் அவர்களை யாரும் மிரட்டவுமில்லை, கடத்தவுமில்லை,மாறாக அந்த 24 வார்டில் அவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால்,— A.P.Nandhakumar MLA (@APNandakumarMLA) February 7, 2022
அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. இந்த உண்மையை நன்கு விசாரிக்கமால் எங்கள் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடையதல்ல. காரணம், பாமக வேட்பாளரை மிரட்டி வெற்றிபெற வேண்டிய நிலையில் திமுக எப்போதும் இருந்ததில்லை என்பதை தாங்களும் அறிவீர்கள் என்று நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.