![Is the governor just to give headache to the state govt K Veeramani](http://image.nakkheeran.in/cdn/farfuture/n7qyhd1wk2j6eK-bqop5z9SpJqiiLNY95cJyRaCz_p8/1734750134/sites/default/files/inline-images/veeramani-art.jpg)
மாநில அரசுக்கு தலைவலி கொடுப்பதற்குத்தான் ஆளுநரா? என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆளுநர், அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்றியே நடக்கக் கடமைப்பட்டவரே தவிர, சுய அதிகாரம் கொண்டவரல்ல. உயர்கல்வித் துறையின் நிர்வாகப் பணிகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவது சட்டப்படி தவறே. உயர் கல்வி வளர்ச்சி தடைபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர, அவசியக் கடமையாகும். மாநில அரசுக்கு அன்றாடம் ‘‘தலைவலி’’ கொடுப்பதற்குத்தான் ஓர் ஆளுநரா?.
தமிழ்நாடு ‘திராவிட மாடல்‘ அரசு நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒப்பற்ற ஆளுமையின் கீழ் கல்வித் துறைகளில் அது பள்ளிக் கல்வியானாலும், உயர்கல்வித் துறையானாலும், தொழிற்கல்வித் துறையானாலும் அனைத்திலும் மிகச் சிறப்பான சாதனைகளை நாளும் செய்து, அனைத்திந்திய மாநிலங்களில் தனித்தோங்கி நின்று வரலாறு படைத்து வருகிறது. தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றுள் ஆறு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக, நிரப்பப்பட முடியாத நிலையில், அவை காலியாகவே உள்ளன.
சென்னை பல்கலைக் கழகம், கோவை, பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், அடுத்து, மேலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டு பல்கலைக் கழகங்களில் தற்போதுள்ள துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், ஆளுநரால் மேலும் ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.
![Is the governor just to give headache to the state govt K Veeramani](http://image.nakkheeran.in/cdn/farfuture/8BkS_HyodQM-YBnq32LADCZUzwG9wVwlKg3x9iADvco/1734750216/sites/default/files/inline-images/rn-ravi-art_9.jpg)
அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த ஆளுநர் பதவியில் இருப்பதால், அரசு பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்கிறார். ‘மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின்மூலமாக வேந்தர் பதவி அமையவேண்டும்; ஆளுநர் பதவி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவி அல்ல. மாறாக, மத்திய அரசின் நியமனம் ஆளுநராக ஏற்பட்டதால் உருவான ஒரு வாய்ப்பு’ என்பதை மாற்றி, வேந்தர் பற்றிய சட்டத் திருத்தம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பாமல், அப்படியே கிடப்பில் வைத்த்துள்ளார்.
இதன் மூலம் உயர்கல்வித் துறையின் பல நிர்வாகப் பணிகளுக்கு சதா முட்டுக்கட்டைப் போட்டு, தனது அதிகாரத்திற்கு மீறிய செயல்களை செய்து, தற்போதுள்ள ‘திராவிட மாடல’ ஆட்சிக்கு அன்றாடம் தலைவலி தந்து, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், தாம் பதவிப் பிரமாணத்தில் எடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாகவும், அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஒரு போட்டி அரசினையே நடத்திக் கொண்டிருக்கிறார். அதில் உயர்கல்வித் துறையின் வளர்ச்சியும், முன்னேற்றமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பது பல கல்வி அறிஞர்கள் மற்றும் மக்களின் கவலையாகவே இருக்கிறது. தன்னிச்சையாக நிராகரித்ததோடு, பகிரங்கமாகவே அறிக்கை வெளியிடுகிறார்.
![Is the governor just to give headache to the state govt K Veeramani](http://image.nakkheeran.in/cdn/farfuture/UUgmbi8aU2WJkZteva6LreBKjUxWWO2xAjUWwJ6AYv4/1734750238/sites/default/files/inline-images/tn-sec-new-art.jpg)
எடுத்துக்காட்டாக, அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான தேடல் குழுவினை தமிழ்நாடு அரசு நியமித்தது ஏற்கத்தக்கதல்ல என்று அவர், தன்னிச்சையாக நிராகரித்ததோடு, பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டு, தமிழ்நாடு அரசின் ஆளுமைக்கு அவப்பெயர் ஏற்படும்படிச் செய்கிறார். தான் விரும்பும் வண்ணம் மூவர் குழுவை, நால்வர் குழுவாக வற்புறுத்தி அப்பல்கலைக் கழக சட்டத்தின்படி செயல்பட முடியாத ஒரு சட்ட மீறலில் ஈடுபடுகிறார். இதுபற்றி உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள் விடுத்துள்ள, தெளிவான சட்டபூர்வ விளக்க அறிக்கை சரியான பதிலடியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.