Skip to main content

‘ஒன்றிய’ சர்ச்சைக்கு விளக்கமளித்த புதுச்சேரி கவர்னர் மாளிகை! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
Puducherry Governor's House explains 'Union' controversy

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 27.06.2021 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற எளிய விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லக்ஷ்மிநாராயணன், ஜெயக்குமார், சாய். சரவணகுமார், சந்திர. பிரியங்கா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சியின்போது அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப் பரப்பு” என உறுதிமொழியை வாசித்தார்.

 

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து ‘மத்திய அரசு’ என்று அழைப்பதற்குப் பதிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியினர் ‘இந்திய ஒன்றிய அரசு’ என்று பயன்படுத்துகின்றனர்.  அதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணி அரசு அமையும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ‘இந்திய ஒன்றியம்’ என அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ‘இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை பயன்பாடு குறித்த சர்ச்சைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. 

 

Puducherry Governor's House explains 'Union' controversy

 

அதில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இரு தினங்களுக்கு முன்பு புதிய அமைச்சர்களுக்கு தமிழில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 40 ஆண்டுகளுக்குப் பின் பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்ற பெருமைமிகு நிகழ்வும் நடந்தேறியுள்ளது. அத்தகைய பெருமை மிக்க நிகழ்வில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாக பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழி படிவத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் பெருமையை மறைக்கும் அளவுக்கு ‘இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை வேண்டுமென்று திரித்துக் கூறப்பட்டுவருகிறது. 'ஒன்றிய அரசு' என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

 

ஆனால் 'ஒன்றிய அரசு' என்று துணைநிலை ஆளுநர் கூறினார் என்று பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு தமிழ்நாடு அமைச்சர்கள் பதவியேற்கும்போது 'தமிழக அமைச்சர்களாக பதவியேற்கிறோம்' என்று கூறினார்களோ, அதேபோல் Indian union territory of puducherry என்ற வாசகம் 'இந்திய ஒன்றியம் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு' என மிக அழகாக வெகு காலத்திற்கு முன்பே புதுச்சேரி தமிழ் அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்தப் படிவம்தான் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன்பின்பு இந்திய ஆட்சிக்குட்பட்டதால் Indian union territory என்கிறார்கள். அதாவது ‘இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்பு’. அதனால்தான் ஒன்றியம் என குறிப்பிடுவது union territory என்ற யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கேயுமே மத்திய அரசு என்று குறிப்பிடப்படவில்லை.

 

Puducherry Governor's House explains 'Union' controversy

 

அதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதாக திரித்துக் கூறுவது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி இந்திய அரசின் ஆளுமைக்கு உட்பட்டிருக்கும் நிலப்பரப்பு. அதனால் 'இந்திய ஒன்றிய புதுச்சேரி நிலப்பரப்பு' என்றுதான் சொல்கிறோமே தவிர, இந்திய தேசத்திற்கான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா அங்கே நடைபெறவில்லை. எனவே மாநில அரசுகளின் பதவியேற்பு விழா படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம்பெறாது. அவ்வாறு இருக்கையில் புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது. ஆகவேதான் இந்த விளக்கம் தேவைப்படுகிறது. 

 

தமிழ் மண்ணில் தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். ஆனால் அதன் மாண்பைக் குறைக்கும் வகையில் ஒன்றிய என்ற சொல்லாடல் சிலரால் தவறாக கருத்து பரப்பப்படுகிறது. இதுபோன்ற சலசலப்புகளால் பலரது தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குறைக்க முயல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

Next Story

'தொகுதிக்கு எதுவும் செய்யலன்னா கல்லால் கூட என்னை அடிங்க' - தமிழிசை பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
'Hit me even with a stone if you don't do anything for the constituency'-Tamil campaign

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.