Skip to main content

தமிழக கலைஞர்கள் பயணித்த ரயிலில் வடமாநிலத்தவர்கள் அத்துமீறல்!

Published on 15/02/2025 | Edited on 15/02/2025

 

People from the northern states issue a train carrying Tamil Nadu artists

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்வை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது. தமிழகத்துக்கும், காசிக்கும் இடையிலான கலாச்சார உறவை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு இன்று (15.02.2025) தொடங்கியுள்ளது. இந்நிகழ்வு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்காகத் தமிழகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் முன்பதிவு செய்யப்பட்ட ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அதன்படி நாட்டுப்புறக் கலைஞர்கள் மேற்கொண்ட ரயில் குஜராத் மாநிலம் ஜோலாப்பூர் என்ற ரயில் நிலையத்தில் இரவு 1 மணியளவில் நின்றுள்ளது. அப்போது வட மாநிலத்தவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியைத் திறக்கச் சொல்லி நாட்டுப்புற கலைஞர்களிடம் வலியுறுத்துள்ளனர். இருப்பினும் பாதுகாப்பு காரணமாக நாட்டுப்புறக் கலைஞர்கள் கதவைத் திறக்க மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த வடமாநிலத்தவர்கள் ரயிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரயிலில் இருந்த காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நாட்டுப்புற கலைஞர்கள் குற்றம் சாட்டினர். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நாட்டுப்புற கலைஞர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

சார்ந்த செய்திகள்