Skip to main content

'இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல'-அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்  

Published on 15/02/2025 | Edited on 15/02/2025

 

 'We are asking for what was lost; it is not a loan' - Minister Anbil Mahesh's response

'தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழகத்திற்கான நிதிகளை கொடுப்பதில்லை. குறிப்பாக பேரிடர் நிவாரண நிதி, கல்விக்கான நிதிகளை ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கிறது' என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து  குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவலில், 'ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் ரூபாய் 2,401 கோடி மத்திய அரசு விடுவிக்கவில்லை. 2023-2024 ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடி அதேபோல், 2024-2025 ஆம் ஆண்டுக்கான தவணைத் தொகை 2,152 கோடி ரூபாய் என தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்ட கூறுகளை நிறைவேற்ற மத்திய அரசு நிதி தரவில்லை.

திட்ட ஏற்பளிப்பு குழு அங்கீகரித்த மத்திய அரசின் 60 சதவீத பங்கான ரூபாய் 2,152 கோடி இதுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 17,632 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது' என தெரிவித்திருந்தார்.

 'We are asking for what was lost; it is not a loan' - Minister Anbil Mahesh's response

இந்த சூழலில் 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும்' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ''தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயை தர சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா? ஏற்றால் தான் நிதி'' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

 'We are asking for what was lost; it is not a loan' - Minister Anbil Mahesh's response

 

இந்நிலையில் மத்திய அமைச்சரின் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?

மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.

உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல." இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும்" என அண்ணாவின் உரையை பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்