Skip to main content

பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்; நடுரோட்டில் கதறி அழுத கேரளப் பெண்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Jain snatched from Kerala woman

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது நெய்யாற்றுக்கரை. இந்தப் பகுதியைச் சேந்தவர் லிஜி. 30 வயதுடைய இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். லிஜி தனக்கென்று இரு சக்கர வாகனம் ஒன்று வைத்திருப்பதால், அதில்தான் வெளியே செல்லும் போது சென்று வருவது வழக்கம்.

அதன்படி, வழக்கமாக தனது இரு சக்கர வாகனத்தில் லிஜி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்து புறப்பட்ட லிஜி நெய்யாற்றுக்கரையில் ஒரு சாலையில் சென்றிருக்கிறார். அந்த சாலையில் வலது புறமாக சென்றவர், ரோட்டை கிராஸ் செய்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் இண்டிகேட்டரை ஆன் செய்து மாறுவதற்கு தயாராகியுள்ளார். ஆனால், அப்போது அடுத்தடுத்து வாகனங்கள் வந்துள்ளது. ஆனாலும் அவசரப்படாத லிஜி, அந்த வாகனங்கள் சென்ற பிறகு மாறலாம் என அந்த இடத்திலேயே நின்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனம் ஒன்றிலிருந்து இரண்டு நபர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு வந்துள்ளனர். அந்த டூவீலர் லிஜி நிற்கும் வாகனத்திற்கு அருகே வந்துள்ளது. அப்போது, அந்த இரு சக்கர வாகனத்தின் பின் புறத்தில் அமர்ந்திருந்த ஒருவன், தனது வாகனத்தை திருப்புவதற்கு தயாராக நின்ற லிஜியின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியைப் சட்டென்று பிடித்து இழுத்துள்ளான்.

இதனை சட்றென்று சுதாரித்து கொண்ட லிஜி, உடனே அவனிடமிருந்து தங்க சங்கிலியைப் பாதுகாக்க முயன்றுள்ளார். அப்போது தனது வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு சங்கிலியை இறுகப் பிடித்துக்கொண்டார் லிஜி. ஆனால், அந்தத் திருடனோ தான் வந்திருந்த பைக்கில் இருந்து இறங்கி அந்தப் பெண்ணுடன் மல்லுக்கட்டி அவரை கீழே தள்ளி, தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த லிஜி, கீழே இருந்து எழுந்து, கத்தி கதறி கூச்சலிட்டுள்ளார். ஆனால், அதற்குள் அங்கு தயார் நிலையில் நின்ற பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றுள்ளான் அந்தத் திருடன். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப் பெண், செய்வதறியாமல் கதறி அழுதுள்ளார். பின்னர், அந்த வாகனம் சென்ற வழியிலேயே ஓடியுள்ளார். இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் பலரும் ஓடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அவரால் அந்த இழப்பை தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்தச் சங்கிலி திருடனோடு மல்லுக்கட்டியதில் அந்தப் பெண்ணுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அங்கிருந்த சிலர் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், தனது தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்த லிஜியிடம் திருடர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின்னர், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை பரிசோதித்துள்ளனர். அதில், தனது டூவீலரில் வந்த லிஜி ரோட் கிராஸ் செய்வதற்காக இண்டிகேட்டர் போட்டுக்கொண்டு காத்திருந்துள்ளார். அப்போது அடுத்தடுத்து வாகனங்கள் வந்துள்ளது. அதில் கடைசியாக வந்த வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்த ஒருவன், திடீரென லிஜியின் சங்கிலியை பறித்து செல்வதும், அதனால் லிஜி கதறி கூச்சலிட்டு கத்துவதும் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

இதனையடுத்து, அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அந்த டூவீலர் அடுத்தடுத்து சென்ற இடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து, திருடன் தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் இவ்வாறு வாகனத்தில் செல்லும் பெண்களின் நகைகளை பறிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும், இதன் காரணமாக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.