Skip to main content

ஜி 20 உச்சி மாநாடு; கார்களை குத்தகைக்கு வாங்கிய மத்திய அரசு

Published on 03/09/2023 | Edited on 03/09/2023

 

G20 Summit Central Govt who bought the cars on lease

 

ஜி20ன் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

 

இந்நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக உலக தலைவர்கள் பயணிப்பதற்காக 20 குண்டு துளைக்காத உயர்தர கார்களை 18 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு குத்தகைக்கு வாங்கியுள்ளது. அதே போன்று 20 விமானங்களை இந்தியாவிற்கு அமெரிக்கா கொண்டு வருகிறது. மேலும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் உலக தலைவர்கள் செல்லும் சாலைகள் உள்ள பகுதிகளில் அதிரடிப்படையினரை கொண்டு மோப்ப நாய்கள் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

G20 Summit Central Govt who bought the cars on lease

 

முன்னதாக டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை என 3 நாட்களுக்கு கடைகளை மூட வியாபாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதே போன்று மாநாடு நடைபெற உள்ள  3 நாட்களுக்கு 160 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் படி டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தரும் 80 விமானங்களும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 80 விமானங்களின் பயண சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. டெல்லி வான்பரப்பில் ட்ரோன்கள், டிரோன் கேமிராக்கள் ரிமோட் ஏர் கிராப்ட், சிறிய வகை விமானங்கள், ராட்சத பலூன்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை பறக்க தடை விதிக்கப்பட்டது.

 

செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது என டெல்லி அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அளித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவிட்டிருந்தார். மேலும் டெல்லியில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் இல்லத்துக்கு கடந்த 1 ஆம் தேதி (01.09.2023) முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதால் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்