
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலத்தைச் சேர்ந்தவர் சுனில். இவர் ஒரு தினியார் நிறுவனத்தில் மார்க்கெடிங்க் பிரிவில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு திருப்பதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சுஹாசினி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே முதலில் நட்பாகி பிறகு காதலாகியுள்ளது. காதலித்திருந்தபோது, சுஹாசினி தனது குடும்பம் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறது எனக் கூறி அவரிடமிருந்து பல்வேறு நேரங்களில் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு, சுனில் வேலைக்கு சென்றிடவே சுஹாசினி அதே காரணத்தை கூறி சுனிலின் தந்தையிடமிருந்தும் ரூ. 2 லட்சம் வாங்கியுள்ளார். இந்த விஷயம் அறிந்து சுனில் சுஹாசினியிடம் சண்டையிட்டுள்ளார். அதன்பின், வீட்டில் யாருமில்லாதபோது, சுஹாசினி, சுனில் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு தப்பித்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சுனிலுக்கு வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளுடன் சுஹாசினியும் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் வீட்டை நன்கு சோதனையிட்ட சுனிலுக்கு சுஹாசினியின் ஆதார் அட்டை கிடைத்துள்ளது. அதனைக் கொண்டு அவரின் முகவரிக்குச் சென்று விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருந்தது தெரியவந்தது. அதன்பிறகு அவர், திருப்பதி அலிபிரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அங்கு ஏற்கனவே இரண்டு வருடங்களுக்குமுன் சுஹாசினி வேறுஒருவரை ஏமாற்றிய வழக்கும் பதியப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நேற்று திருப்பதி சிம்ஸ் மருத்துவமனை அருகே ஒரு பெண் சந்தேகிக்கும் சுற்றித் திரிந்ததைக் கண்டு அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது மூவரை ஏமாற்றிய சுஹாசினி அவர்தான் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து இன்னும் யாரையாவது ஏமாற்றியுள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.