Skip to main content

கரோனா தடுப்பு - பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

coronavirus prevention prime minister narendra modi cabinet meeting in delhi

 

இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

 

குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

 

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள், மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோருடன் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

அந்த வகையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (28/04/2021) காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசிக்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்