Skip to main content

லாக்-அப் மரண வழக்கில் 2 போலீசாருக்கு தூக்கு!- 13 வருடங்கள் மகனின் நீதிக்காகப் போராடிய தாய் மகிழ்ச்சி..!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
lock up death


கேரளாவில் 13வருட சட்டப்போராட்டத்தை மேற்கொண்ட தாய் ஒருவர் தனது மகனின் மரணத்திற்கு நீதி பெற்றுள்ளார்.

திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி 67. இவரது மகன் உதயகுமார், (வயது 30). கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவில் உதயகுமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களை கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவு முழுவதும் போலீசார் தாக்கியதில் உதயகுமார் இறந்து போனார்.

 

 

இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு உதயகுமார் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உதயகுமார் சாவு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

சி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  2 poli


பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் அறவித்தார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. உதவி எஸ்.ஐ ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய மூவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமாரின் தாய் பிரபாவதி, நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. என் மகன் கொல்லப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய நீதி கிடைத்துள்ளது. இந்த 13 வருட போராட்டம் என்பது என் மகனுக்கானது. தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்துக்கு என் மனமார்ந்த நன்றி என கூறினார்.

சார்ந்த செய்திகள்