Skip to main content

ஒரே பாலின திருமணம்; சட்டப் பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு பதில்!

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

same-sex marriage; The central government's response to legal recognition!

 

ஒரே பாலின திருமணத்தை சட்டமாக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

2018 ஆம் ஆண்டில் தன்பாலின ஈர்ப்பில் காதல் என்பது குற்றமற்றது என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இருப்பினும் தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்நிலையில், சிறப்பு திருமண சான்றிதழின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஒரே பாலின ஜோடி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள ஒரே பாலின ஈர்ப்பு திருமண வழக்குகளை விசாரிக்க முடிவு செய்தது. தொடர்ந்து ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து விளக்கமளிக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 

 

இந்த வழக்குகள் அனைத்தும் நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது. அந்த பிரமாணப் பத்திரத்தில், ‘தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பு என்ற கருத்துடன் ஒத்துப் போகாது. இந்திய குடும்ப அமைப்பு என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியது. இந்திய குடும்ப அமைப்பில் ஆண் பெண் என உயிரியல் வேறுபாடுகள் கொண்ட இருவர் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதே சிவில் சமூகம். தன் பாலின ஈர்ப்பாளர்களை குடும்ப அமைப்புடன் ஒப்பிடக்கூடாது. அரசியல் அமைப்புச் சட்டம் 19ன் படி குடிமக்கள் சேர்ந்து வாழத் தடையில்லை. அதே நேரத்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது பற்றி அரசு தான் தெரிவிக்கும். குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களை சேர்க்க இயலாது. தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கூடாது.’ என மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்