Skip to main content

மக்கள் இல்லாத தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமா? – நியூட்ரினோ திட்டம் குறித்து பூவுலகின் நண்பர்கள்

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

‘நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது’ என சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது. நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், இந்த பரிந்துரை பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது. 

 

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள பொட்டிபுரம் கிராமத்திற்கு அருகாமையில் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில்தான் இந்தத் திட்டமானது தொடங்கப்படுவதற்கான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போதிருந்தே அந்தப் பகுதியின் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

Nuetrino

 

இந்நிலையில், ‘நியூட்ரினோ திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை தயாரிக்கத் தேவையில்லை. இது சிறப்புத்திட்டம் என்பதால் பொதுமக்களிடமும் கருத்து கேட்கத் தேவையில்லை. இந்த ஆய்வகத் திட்டத்தினால் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் துளியளவும் இருக்காது’ என சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு கடந்த மார்ச் 5ஆம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இந்த பரிந்துரையினை முன்வைத்துள்ளது.

 

நியூட்ரினோ திட்டத்தினால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி, பூவிலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்கு தடைவிதித்தது. 

 

தற்போது சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு அதில் எந்த பிரச்சனையும் இல்லை எNuetrinoன கூறியிருக்கும் நிலையில் பூவுகலகின் சுந்தர்ராஜன் நம்மிடம், ‘இது முற்றிலும் தவறான விஷயம். ‘தேசிய முக்கியத்துவம்வாய்ந்த திட்டம்’ என்று நியூட்ரினோ திட்டத்தை சொல்கிறார்கள். அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டுதானே இருக்கமுடியும்? தமிழ்நாடு அரசு வைகை ஆற்றுப்படுகை, பல்லுயிரின பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை கருத்தில்கொண்டு ஆய்வு நடத்தவேண்டும் என்று இந்தத் திட்ட முன்மொழிவிற்கு பதிலளித்திருந்தது. ஆனால், தேசிய முக்கியத்துவம் என்ற பெயரில் எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல் ஒரு திட்டத்தை கொண்டுவரும் பரிந்துரை சரியான விஷயமாக இருக்கமுடியாது. கதிர்வீச்சு பாதிப்புகள் இல்லை என்று அதற்கான துறைக்குப் பதிலாக சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு எப்படி சொல்லமுடியும்? இத்தனை காலம் அறிவியல் ஆராய்ச்சி என்று சொல்லப்பட்டுவந்த ஒரு திட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) அதிகாரிகளை கொண்டுவந்து நிறுத்தவேண்டிய அவசியம் என்ன? சுற்றுச்சூழல் அனுமதிபெற இந்த பரிந்துரை போதுமானது. அதன்பிறகு வனத்துறையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதியளிக்கவேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல் அனுமதி பெறுவதற்கான எல்லா வேலைகளும் இந்த பரிந்துரையில் செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தால் அதற்கெதிரான நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுப்போம். நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம். எந்தத்திட்டம் எங்கே வரவேண்டும் என்கிற அனுமதியை மக்கள்தான் தரவேண்டும். எந்த சிறப்புத் திட்டமானாலும் மக்களுக்குத்தான் திட்டமே தவிர, திட்டத்திற்காக மக்கள் கிடையாது’ என்கிறார் உறுதியாக.

 

நியூட்ரினோ திட்டத்திற்கான பரிந்துரையை அளிக்கும்போதே பல்வேறு விஷயங்களையும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு அறிவுறுத்தி இருக்கிறது. குறிப்பாக எல்லா வேலைகளும் முடிந்தபிறகு அங்கு மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. தான்தோன்றியான மகாவனத்தின் ஒரு பகுதியை அழித்துவிட்டு அங்கு மரம் நடச்சொல்வது எத்தனை வேடிக்கையான விஷயம்!

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.