Skip to main content

I.P.L. போராட்டத்திற்கு தமிழிசை வந்திருக்க வேண்டும்... தனியரசு பேட்டி

Published on 13/04/2018 | Edited on 13/04/2018


 

tamilisai soundararajan h.raja


ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழிசை சவுந்திரராஜன் வந்திருக்க வேண்டும். 'Go back Modi' என்ற முழக்கத்தை தமிழக பாஜக முன்னெடுத்திருக்க வேண்டும் என்று தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கேயம் தொகுதி எம்எல்ஏவுமான தனியரசு கூறியுள்ளார்.
 

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார் தனியரசு. 
 

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, பிரதமர் வருகைக்கு கருப்பு கொடி காட்டுவது சிறுபிள்ளைத்தனமானது. தமிழகத்தில் நடப்பவை போராட்டம் அல்ல. தேச விரோத செயல்கள். இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வரை ஐ.பி.எல். போட்டியை தமிழகத்தில் நடத்தக் கூடாது என்பது ஒட்டுமொத்த கட்சிகளின் விருப்பம், பாஜகவை தவிர. 7 கோடி மக்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம் என்பது இவரது பேச்சில் தெரிகிறது. பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள். 
 

தமிழ்நாட்டில் ராணுவத் தளவாடங்களை நிறுவக் கூடாது. அண்டை நாடுகள் போர் காலத்தில் எதிரிகளின் இலக்காக இருக்கக்கூடிய ஆயுத தொழிற்சாலைகள், உற்பத்தி பொருட்களைத்தான் தாக்குவார்கள். அப்படி தாக்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆயுத தொழிற்சாலை மீது அபாயகரமான தாக்குதல்களை வானில் இருந்து நடத்தலாம். அதில் தமிழ்நாட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இந்த தொழிற்சாலை லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு தரும் என்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த பெல் நிறுவனம், சேலம் உருக்காலையை மூட மத்திய அரசு முயற்சி செய்தது. நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயச்சி செய்தது. ஆயிரக்கணக்கானவர்களின் வேலையை பறிக்க நினைக்கும் அரசு எப்படி லட்சக்கணக்கானவர்களுக்கு வேலையை வழங்கும்.
 

உச்சநீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்தாத, நடுவர் மன்ற தீர்ப்பை மதித்து அதனை செயல்படுத்தாத, 7 கோடி தமிழர்களுக்கு மதிப்பளிக்காத, சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காத, முதல்வர் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்காத பிரதமரை எப்படி தமிழக மக்கள் வரவேற்பார்கள். மத்திய அரசு மதிக்கவில்லை என்றுதான் பொதுமக்கள் தானாக முன்வந்து கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்றனர்.

 

thaniyarasu


 

நேற்று நடந்த கருப்புக்கொடி போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே?
 

அப்படியென்றால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களா? ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களா?. தமிழக மக்களின் நலன்களுக்காக போராடுகின்ற அறவழி போராட்டக்காரர்களை, ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியவர்களை கேவலப்படுத்துவது, இழிவுப்படுத்துவது, தேச விரோதிகள் என்று அடையாளப்படுத்த முயற்சிப்பது அரசியல் பண்புக்கு எதிரானது. எச். ராஜா, தமிழிசை ஆகியோர் இதுபோன்ற கருத்துக்களை பரப்ப வேண்டாம். வெகுஜன மக்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 
 

ஐபிஎல் போட்டியை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் பங்கேற்க பாஜக வந்திருக்க வேண்டும். தமிழிசை அவர்கள் வந்திருக்க வேண்டும். மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்று 'Go back Modi' என்ற முழக்கத்தை பாஜக முன்னெடுத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்களின் விருப்பத்திற்கு, தமிழக பாஜகவின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காத மோடியை வரவேற்க விருப்பவில்லை என்று தமிழக பாஜகவே எதிர்த்திருக்க வேண்டும். அப்படி எதிர்ப்பை காட்டியிருந்தால் தமிழக பாஜகவை பொதுமக்கள் நம்புவார்கள். தமிழ்நாட்டு மக்களெல்லாம் ஓரணியாக இருக்கிறார்கள். தமிழக பாஜக தனியாக இருக்கிறது என்பது புலப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறைந்த பட்ச செல்வாக்கையும் பாஜக தற்போது இழந்துள்ளது. ஆகையால் இவர்களின் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.