
திருச்சி விமான நிலையத்தில் இன்று (01.02.2021) அதிகாலை பணியிலிருந்த விமான நிலைய அதிகாரிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் ஒரு பெண் பேசியுள்ளார். அதில், “சுங்கம் குறித்த படிப்பு மற்றும் தேர்வுகள் எழுதாமல் நீங்கள் இந்தப் பணிக்கு வந்திருக்க முடியாது,” என்று கூறிய அந்த மர்ம பெண் தொடர்ச்சியாக, “நீங்கள் பல்வேறு குற்றங்களை செய்து வருகிறீர்கள்.
இது தொடர்ந்து நடைபெற்றால் விமான நிலையத்தில் வெடிகுண்டு வீசி விடுவேன்.” என்றும் மிரட்டியிருக்கிறார். எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது என்றும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறிய அந்தப் பெண், சரியாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
விமான நிலைய அதிகாரிகள் அந்த தொலைபேசி அழைப்பு வந்த இடத்தையும் அதில் பேசிய பெண்மணி யார் என்பது குறித்தும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல காத்திருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகளை விமான நிலையத்துக்குள் இருந்து வெளியேற்றி விட்டு அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் விமானம் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.