Skip to main content

ஏழைப்பங்காளரின் தொகுதியில் செல்வந்தர்களே வேட்பாளர்கள்! -சாத்தூர் இடைத்தேர்தல் சங்கடம்!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

‘அமமுக பக்கம் சாய்ந்த எம்.எல்.ஏ. எஸ்.ஜி.சுப்பிரமணியனின் பச்சைத் துரோகத்தால்தான், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, சாத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் திணிக்கப்பட்டிருக்கிறது.   எஸ்.ஜி. சுப்பிரமணியனின் அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டதே அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிதான்.  சுயநலத்தால் அதைச் சுத்தமாக மறந்து, அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்படவிருக்கும் ராஜவர்மனுக்கு எதிராக அமமுக வேட்பாளராகக் களம் காணவிருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ.வும். அமமுக மா.செ.வுமான எஸ்.ஜி.சுப்பிரமணியன்..’ என்று நறநறத்தபடி வரிந்து கட்டுகிறார்கள் அதிமுகவினர். 

 

 Virudhunagar election situation

 

முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியனுக்கே வாய்ப்பு என்று அமமுக தரப்பில் உறுதியாகச் சொன்னாலும்,  ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் செந்தில்குமாரியின் கணவர் முத்துராஜ்,  ‘நானும் இருக்கிறேன்’ என்று வேட்பாளர் கனவை வெளிப்படுத்தி வருகிறார். டிடிவி தினகரனோ, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கே இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் முன்னுரிமை என்பதில் உறுதியாக இருக்கிறார். அமமுகவினரோ ‘நாங்கள் செய்தது துரோகம் அல்ல; ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவர நினைத்தோம். அதனால்தான், தகுதி நீக்கம் செய்யப்பட்டோம். நியாயமாகப்  பார்த்தால் ஓ.பன்னீர்செல்வம் செய்ததுதான் பச்சைத் துரோகம். அவர் அங்குதானே இருக்கிறார்? எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும்தான் துரோகிகள்.’ என்று அதிமுக தொண்டர்களுக்கு தேர்தல் களத்தில் புரியவைப்போம் என்கிறார்கள்.  

 

 Virudhunagar election situation

 

கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ‘ஆல்-இன்-ஆல்’ ஆக இருக்கும் கெட்டிக்கார அரசியல்வாதி ராஜவர்மன் என்றாலும், தொகுதியிலுள்ள அதிமுகவினருக்கு, அவர் துரைப்பாண்டியாக இருந்த காலத்திலிருந்தே  நன்றாகத் தெரியும். அதேநேரத்தில், தொகுதி மக்களுக்கும் ராஜவர்மனுக்கும் ரொம்பவே தூரம்.   அமைச்சரின் ஆசியாலும்,  ஆட்சி அதிகாரத்தாலும், பணபலத்தாலும் தெம்பான வேட்பாளராக இருக்கிறார் ராஜவர்மன். உளவுத்துறை அளிக்கும் தகவலால்,  ஒருவேளை ராஜவர்மனுக்கு வாய்ப்பு இல்லையென்றால்,  ‘நெக்ஸ்ட் சாய்ஸ்’ ஆக இருக்கிறார் வழக்கறிஞரும் அம்மா பேரவை நிர்வாகியுமான சேதுராமானுஜம்.  ‘கட்சியினருக்கு டீ கூட வாங்கித் தரமாட்டார்‘ என, இவருடைய சிக்கனம் குறித்து சீரியஸாகப் பேசுகிறார்கள் ர.ர.க்கள். 

 

 Virudhunagar election situation

 

கடந்த சட்டமன்ற தேர்தலில் 4,427 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தார், இந்த இடைத்தேர்தலில் மீண்டும் திமுக வேட்பாளராகக் களமிறக்கப்படும் ஸ்ரீனிவாசன். சென்னை, ஹைதராபாத் என கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் இவருக்குப் பணமெல்லாம் தண்ணி பட்டபாடு. தொகுதியில் பணத்தை வாரியிறைப்பதற்குத் துடியாய்த் துடிக்கிறார். கடந்த மாதம் சாத்தூரில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட, மாநாடு அளவுக்கு  பிரம்மாண்டம் காட்டிய வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஸ்ரீனிவாசனே முன்னின்று செய்தார்.

 

 Virudhunagar election situation

 

கடந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் என திமுக தரப்பில் சொல்வது என்னவென்றால், அங்கங்கே தன்னுடைய ஆட்களைக் களத்தில் இறக்கி செலவு விஷயங்களைப் பார்த்துக்கொண்டது, தொகுதியில் ஸ்ரீனிவாசன் மலைபோல் நம்பிய உறவினர் மீதான பொதுவான அதிருப்தி போன்றவைதான்,  சில ஏரியாக்களில் வாக்குகளை இழக்கச் செய்தன. இந்த அளவுக்குச் செலவழிக்கக்கூடிய வேட்பாளர் திமுகவுக்கு கிடைத்திருப்பது அதிமுகவினரையே பொறாமை கொள்ள வைத்திருக்கிறது. ‘என்ன இருந்தாலும் ஸ்ரீனிவாசன் உள்ளூர் கிடையாது. சொந்தவீடுகூட சாத்தூர் தொகுதியில் இல்லை. தொழிலுக்காக ஆந்திரா போய்விடுவார். வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகிவிட்டால், சென்னைக்கும் ஹைதரபாத்துக்கும் போனால்தான் பார்க்கமுடியும்.’ என்கிற ரீதியிலான விமர்சனம் ஸ்ரீனிவாசனின் பலவீனம்.

 

தொகுதியில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் வாக்குகளை ஆளாளுக்குப் பிரிக்கும் நிலையில்,  பிற சமுதாய மக்களின் ஆதரவைப் பெறுவதுதான் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுகோலாக இருக்கிறது. பிரதான தொழிலான தீப்பெட்டித் தொழில், இயந்திரமயமான பிறகு நசிந்துபோனது, மாற்றாக உள்ள பட்டாசுத் தொழிலும் அழியும் அபாயத்தில் இருப்பது, ரூ.38 கோடி நிதி ஒதுக்கியும் கிடப்பில் உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் என இத்தொகுதியில் பிரச்சனைகள் வரிசைகட்டி நிற்கின்றன. 

 

‘ஏழைப்பங்காளர்’ காமராஜரை இரண்டு தடவை  எம்.எல்.ஏ. ஆக்கிய சாத்தூர் தொகுதியில், தற்போது வேட்பாளர் ஆவதற்கான தகுதி பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.