Skip to main content

“காவல் ஆணையரின் உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது” - வரிச்சூர் செல்வம் பேட்டி!

Published on 13/04/2025 | Edited on 13/04/2025

 

Varichur Selvam says Police Commissioner order is shocking

மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.கழுத்தி பெரிய தங்கச் சங்கிலிகளையும், கைகளில் தங்க நகைகளையும் அணிந்து மக்களின் கவனத்தை ஈர்த்தும் வருபவர் ஆவார். இத்தகைய சூழலில் தான் இவரும், இவரது ஆதரவாளர்களும் கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயல்களில்  ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கோவை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர விசாரணையிலும், சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் அவரையும், அவரது ஆதரவாளர்கள் பற்றியும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதன் காரணமாக கோவை மாநகர காவல்ஆணையர் சரவண சுந்தர், வரிச்சூர் செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும், அச்சமயத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் வரிச்சூர் செல்வத்தை  சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் உள்ள தனது இல்லத்தில் வரிச்சூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நான் தற்போது எந்தப் பிரச்சினைக்கும் செல்வதில்லை. கோவைக்குச் சென்று சுமார் 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு கோவையில் செல்லையா என்பவரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. நான் தவறான எதையும் செய்யவில்லை. என்னை போலீஸ் சுடுவார்கள் என்பது உண்மைதான். எனக்கு எதிரியாகவே யாரும் கிடையாது. காவல் ஆணையரின் உத்தரவு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்