Skip to main content

போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது - பாடம் நடத்திய முன்னாள் மாணவிகள்

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
kulamangalam school



புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக 10 ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் அந்த பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காண பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. 
 

இந்த நிலையில் கடந்த நவம்பர் 16ந் தேதி புயலில் அந்த கிராமமும் அதிகமாக பாதிக்கப்பட்டதால் மாணவர்களுக்கும் தொடர்ந்து பல நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனால் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாதிப்பு எற்பட்டிருந்தது.
 

இந்த நிலையில் ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தொடந்து 2 நாட்கள் வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதால் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், இளைஞர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து ஆசிரியர் பயிற்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவிகளை நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடத்த தொடங்கி உள்ளனர். 

 

kulamangalam school


 

சிவரஞ்சினி, ரஞ்சிதா உள்ளிட்ட 3 முன்னாள் மாணவிகள் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டிகளை முன்னாள் மாணவர்கள் செய்து கொடுத்துள்ளனர். 
 

இது குறித்து குளமங்கலம் வடக்கு கிராம இளைஞர்கள் கூறும்போது, தொடர்ந்து 7 ஆண்டுகள் சாதித்த பள்ளி இந்த ஆண்டு விடக் கூடாது என்பதாலும் புயல் நேரத்திலும் விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் தற்போது ஆசிரியர் போராட்டத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அனுமதியுடன் 10 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த தொடங்கி இருக்கிறோம். உணவு வசதியும் செய்து கொடுத்திருக்கிறோம். மேலும் ஆசிரியர்கள் போராட்டம் முடிந்து பள்ளிக்கு திரும்பினாலும் மாணவர்களுக்கு தேர்வு காலம் வரை சிறப்பு வகுப்புகளை முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து நடத்துவோம் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்