![Tamilnadu chief minister edappadi palanisamy visited tirupati temple](http://image.nakkheeran.in/cdn/farfuture/6BYaiidq1lyf5CaO55xU8bIOzhSxNQYbdyRz_4tqHnw/1605607782/sites/default/files/inline-images/th-sd.jpg)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திரா மாநிலம் திருமலை ஏழுமலையானை வணங்க நவம்பர் 16ஆம் தேதி மாலை குடும்பத்தாருடன் திருப்பதி சென்றார். திருமலைக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடியை, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் சார்பில், முதல்வர் என்கிற முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். ஆனால் அப்படியொரு வரவேற்பு இப்போது அளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல்துறையின் கீழ்நிலை அதிகாரி ஒருவர் வந்து பூங்கொத்து தந்து வரவேற்பு அளித்துள்ளார். காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்தவரை, கோயில் சார்பில் அதன் உயர் அதிகாரி அல்லது தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர்தான் வரவேற்பு அளிக்க வேண்டும். அதுதான் மரபு. அந்த மரபை மீறியுள்ளனர்.
ஆந்திராவை தவிர்த்து தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உட்பட பிற மாநில முதல்வர்கள், திருமலை வந்தால் வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் தமிழக முதல்வருக்கு அப்படியொரு வரவேற்பு அளிக்கவில்லை. கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்கள் வந்தால் பெரும் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கிறார்கள். தமிழக முதல்வருக்கு மட்டும் அப்படியொரு வரவேற்பில்லை.
தமிழக முதல்வர் என்பவர் தமிழக மக்களின் பிரதிநிதி. அப்படியிருக்க தமிழக முதல்வரை அவமதிப்பது எந்த விதத்தில் சரியானது? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தின் சார்பில் இரண்டு பிரதிநிதிகள் தேவஸ்தானம் போர்டில் உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து கோயில் தரப்பில், திருச்சனூர் பிரம்மோற்சவத்துக்கு அதிகாரிகள் சென்றுவிட்டார்கள் எனத் தகவல் கூறினர்.
![cnc](http://image.nakkheeran.in/cdn/farfuture/PL81U2OEyWi4fIc51p2Q-EYuanv6bRyAM1xzG7KYrSQ/1603347336/sites/default/files/inline-images/01%20%281%29_0.png)
இந்நிலையில், நவம்பர் 17ஆம் தேதி காலை, தனது மனைவியுடன் தரிசனம் முடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, கோயில் அதிகாரி பிரசாதம் போன்றவற்றை வழங்கினார். தரிசனம் முடிந்ததும் அங்கிருந்து சென்னை திரும்பினார் முதல்வர்.