கடந்த வாரம், தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட விசயம் 2 வயது குழந்தை சுர்ஜித். அவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட சம்பவம் உலக தமிழர்களை உலுக்கியது. அரசாங்கம் எவ்வளவோ முயன்றும், 80 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுர்ஜித் உடல் துர்நாற்றம் வீசி அழுகிய நிலையில் பாதி சடலமாக மீட்கப்பட்டான்.
![Sujith falls in deep well ... Surprised grandfather is shocked](http://image.nakkheeran.in/cdn/farfuture/F4SQoI79SwGoF3g_6GC9hT_qXZkdeL10JfIEMRy5sfw/1572542500/sites/default/files/inline-images/GRAND%20FATHER333.jpg)
சிலர் சுர்ஜித் இறந்ததற்கு, அவனுடைய பெற்றோரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குழந்தையை பார்த்துக்கொள்ளாமல் பெற்ற தாய் எப்படி இருந்தார் என்று சமூக வலைதளங்களிலும், பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று மணப்பாறை காவல் நிலையத்தில் வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின் அடிப்படையில் சுர்ஜித் மரணம் சந்தேகம் மரணம் என்கிற ரீதியில் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த ஆழ்துளை கிணறு குறித்து நக்கீனுக்காக சுர்ஜித் தாத்தா தேவராஜிடம் பேசினோம். அப்போது அவர் "ஆழ்துளை கிணறு தோண்டியது குறித்து என் மகனுக்கோ, மருகளுக்கோ தெரியாது. அது எங்கள் குடும்ப சொத்து, இந்த பகுதியில் 3 ஆழ்துளை கிணறு தோண்டியிருக்கிறோம். ஆனால் எதிலும் தண்ணீர் வரவில்லை. மேலும் இந்த ஆழ்துளை கிணறு வெட்டி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 600 அடிக்கு மேல் போட்டும் தண்ணீர் இல்லை என்றதும் கொஞ்சம் மண் போட்டு சாக்கு வைத்து மூடிவிட்டோம்.
கடந்த 10 வருடங்களாக அந்த இடத்தில் அந்த குழியின் மேல் விவசாயம் செய்து வருகிறோம். அந்த குழி இருந்ததையே மறந்து விட்டோம். அந்த நிலம் பள்ளமான பகுதி கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையில் தண்ணீர் எல்லாம் அந்த ஆழ்குழாயில் நிரம்பியிருக்கிறது. அதனால் தண்ணீர் உள்வாங்கி அது மீண்டும் திறந்து இருக்கிறது" என்றார்.