தமிழக அரசின் மூன்று ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை சேலத்தில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த புகைப்பட கண்காட்சியை ஒரு வாரத்திற்கு பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சேலத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, "அதிமுக அரசு திட்டங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் ஸ்டாலின் சொல்லட்டும். ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக திட்டங்களை பட்டியலிட்டு காட்டியுள்ளோம். சேலத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டடுக்கு மேம்பாலம் இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்படும். மருத்துவத்துறையில் பல்வேறு சாதனை சகாப்தங்களை தமிழக அரசு படைத்து வருகிறது.
![salem former cm jayalalitha birthday celebration meeting cm speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZAMSF8MZRYD3OOJtGNwlMKDlVeTkhTSsU9yZOnVKq5s/1582554903/sites/default/files/inline-images/cm3_4.jpg)
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சி தலைவர் தமிழகத்தில் உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், விவசாயிகளை கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பேன் என ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நான் ஒரு விசித்திர விவசாயிதான். விசித்திர விவசாயி என என்னை ஸ்டாலின் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.