Skip to main content

தனியார் மருத்துவமனையின் அலட்சியம்; காயம்பட்ட இடத்தில் துணியை வைத்து தைத்த கொடூரம்

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
private hospital sewed the injured area with cloth

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பூபதி என்பவர் கடந்த 1 ஆம் தேதி வேலை நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில், இடையன்காட்டுவலசு சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக, நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து அப்பகுதி மக்கள் பூபதியை மீட்டு, அதே பகுதியில் செயல்பட்டு வரும்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு பூபதியை பரிசோதித்த மருத்துவர்கள் காயமடைந்த இடத்தில் தையல் போடவேண்டும் என கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சிகிச்சை நடைபெற்றதையடுத்து வீட்டிற்கு வந்த பூபதிக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பூபதி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, தையல் போடப்பட்ட இடத்தை அரசு மருத்துவர்கள் சோதனை செய்த போது, காயமடைந்த இடத்தில் சிறிய துணி வைத்து தையல் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து கார் ஓட்டுநர் பூபதியிடம் தகவல் தெரிவித்ததோடு, மறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அறுவை சிகிச்சைக்குத் தயாராகி வரும் பூபதி, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, காயமடைந்த இடத்தில் ரத்தம் நிறுத்துவதற்காக இதுபோன்ற சிகிச்சை செய்வது வழக்கமான ஒன்று எனத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவர்களின் விளக்கம் குறித்து அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, ரத்தம் நிறுத்துவதற்கு இதுபோன்ற முறைகளை நாங்கள் எப்போதும் செய்வதில்லை எனத் தெரிவித்தனர். இது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வீட்டில் சந்தனக்கட்டை பதுக்கல்; முதியவர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sandalwood hoarding at home; The old man was arrested

                                                                      கோப்புப்படம் 

ஈரோட்டில் வீட்டில் 15 கிலோ சந்தனக்கட்டை பதுக்கிய முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அரசபுரம் கே.என். பாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பங்களாபுதூர் போலீசார் அங்கு ரோந்து சென்று பெருமாள் என்ற கட்டப்பெருமாள் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 15 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாளை போலீசார் பிடித்து சந்தனக்கட்டையுடன் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பெருமாளிடம் வனத்துறையினர் சந்தன மரம் எங்கு வெட்டப்பட்டது. எந்தெந்த பகுதியில் சந்தன மரங்கள் வெட்டப்படுகிறது. எங்கெல்லாம் சந்தன மரம் விற்பனை நடக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு ; போலீசார் விசாரணை

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
nn

ஈரோட்டில் நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு சோலார் அருகே வெங்கடேசன் என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்த பேருந்துகள் அதே பகுதியில் இரவு நேரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இதேபோல் மற்ற பேருந்துகளும் அதே பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்துகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூன்று பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. அதேபோல் ஒரு சுற்றுலா வாகனத்தின் கண்ணாடியும் உடைந்தது. இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி அல்லது முன் விரதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.