Skip to main content

வழக்கறிஞர் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு கொலை; கோவையில் கொடூரம்!

Published on 03/08/2024 | Edited on 03/08/2024
Lawyer incident in Coimbatore

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்.உதயகுமார்(48). கோவையில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி நித்யாவள்ளி, கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை(2.8.2024), பொள்ளாச்சி செல்ல திட்டமிட்டுள்ளதாக உதயகுமார் தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் தனது வீட்டில் இருந்து தனது காரில் பொள்ளாச்சிக்குப் புறப்பட்டுள்ளார்.  வீட்டை விட்டுக் கிளம்பிய எஸ்.உதயகுமார் மைலேரிபாளயம் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே மதியம் 12 மணியளவில் சடலமாகக் கிடந்துள்ளார். அவரது கழுத்து மற்றும் மார்பில் பல காயங்கள் இருந்துள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் செட்டிபாளையம் போலீசாக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உதயகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்த உதயகுமாரை தடுத்து நிறுத்தி, அவரை காரில் இருந்து இறங்கச் சொல்லி கோழிப்பண்ணை அருகே கொண்டு சென்று, கத்திகளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி உயிருக்குப் போராடினார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், உதயகுமாரின் ஆணுறுப்பை அரிவாளால் அறுத்தும், சிதைத்தும் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் அவரது காரையே எடுத்துக்கொண்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். அவரது ஆணுறுப்பைச் சிதைத்து கொலை செய்து உள்ளதால் அவர் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்துள்ளார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். "இந்த வழக்கில் முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. தனிப்படை போலீசார் விரைவில் கொலையாளிகளைப் பிடிப்பார்கள்" என்று எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்