Skip to main content

“நல்லுள்ளம் கொண்ட தலைவராக ஒளிர்ந்துள்ளார்” - இ.யூ. முஸ்லீம் லீக் தலைவர் இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
IU Muslim League leader condoles of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ்கம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்காந்தின் உடல் அஞ்சலிக்காக கோயம்பேடு அருகே உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள். ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் இரங்கல் அறிக்கை வெளியிட்ட இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், “விஜயகாந்த் மரணமுற்ற செய்தி மிகுந்த துக்கத்தையும் வேதனையையும் தந்தது. தமிழகத்தில் திரைப்படத் துறையில் ஒளி மிகுந்த நட்சத்திரமாகத் திகழ்ந்து, பல கோடி ரசிகர்களின் மனத்தில் இடம் பெற்று, தனக்கென தனியொரு தமிழ் வழி வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து வந்தவர். தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தனது செல்வாக்கையும் சொல்வாக்கையும் நிலை நிறுத்தி, தமிழகச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்து, எண்ணற்ற இதயங்களில் இடம் பிடித்திருந்தார்.

தமிழக வரலாற்றில் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராஜர், கண்ணியத்துக்குக்குரிய காயிதே மில்லத் என்றெல்லாம் புகழ் பெற்றுள்ளவர்கள் பட்டியலில் ‘விஜயகாந்த்’ ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று போற்றப்படுபவராக விளங்கி வந்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் நல்லுள்ளம் கொண்டவர் என்றும், பிறருக்கு உதவுவதில் பாரி வள்ளல் போன்றவர் என்றும், துணிச்சலாகப் பேசுவதில் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று முழங்கிய நக்கீரன் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும் பலரும் புகழ் மாலை சூட்டுவதைக் காண முடிகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐயா மூப்பனார் அவர்களுடன் தேர்தல் உடன்பாடு கொண்டிருந்த காலத்தில் அன்றைக்கு வளர்ந்து வரும் நடிகர் உலக நட்சத்திரமாகத் திகழ்ந்த விஜயகாந்த் அவர்களை சில நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிய நினைவுகள் எல்லாம் வந்து போகிறது. மதுரையில் முஸ்லீம் சமூக மக்களுடன் மிகமிக நட்போடும் உறவோடும் வாழ்ந்து வந்துள்ளார் என்று சிலாகித்துப் பேசியதை எல்லாம் கேட்டிருக்கின்றோம்.

தமிழகத்தில் பொது வாழ்வில் எல்லாருடைய பாராட்டுக்கும் உரிய நல்லுள்ளம் கொண்ட தலைவராக ஒளிர்ந்துள்ளார். அவரின் மறைவால் வாடும் அவருடைய இயக்கத் தோழர்களுக்கும் அவரின் அன்பு குடும்பத்தாருக்கும் இ.யூ. முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது. மறைந்தும் மறையாத விஜயகாந்த் அவர்களின் ஆன்ம சாந்திக்கு நாம் அனைவரும் இறைஞ்சுவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.