![erode east by election simon add one fir filed](http://image.nakkheeran.in/cdn/farfuture/6o3ZWEVCkPcEC1gipY2YAhaLJqdXWVaPnhqLAv1uPyY/1677221842/sites/default/files/inline-images/simon-art.jpg)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அருந்ததியினர் குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக ஒரு பிரிவினர் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு தடைவிதிக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர்.மேலும் காவல் நிலையத்தில் சீமான் சர்ச்சை பேச்சு குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நாம் தமிழர் கட்சி கடந்த 20 ஆம் தேதி உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், அதனை மீறி ஆலமரத் தெருவில் பரப்புரை மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைப் பெற்ற ஈரோடு தெற்கு காவல்துறையினர் 171F என்ற பிரிவின் கீழ் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் ஈஸ்வரன், கருங்கல்பாளையத்தில் காவல் நிலையத்தில் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில் கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.