![Corona infection for junior earnings analyst; Lock for the coroner's wattachier office](http://image.nakkheeran.in/cdn/farfuture/QFKH-PA2SN66c4ewnAD6mqLo6dmH8socrfmH7yxPvaA/1592676858/sites/default/files/inline-images/ghiu.jpg)
தமிழக அரசு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதில் முறையான கவனம் செலுத்தாமல் விட்டதன் விளைவு காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை என அடுத்தடுத்து நோய் தொற்று பரவி அரசு ஊழியர்களை கலங்கடித்த செய்திருக்கிறது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பனியாற்றிவரும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
இதுகுறித்து விசாரித்தோம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளர் ஒருவர் கடந்த சில நாட்களாக மாவட்ட எல்லையான ஆணைக்காரன்சத்திரம் கொள்ளிடம் பாலத்தில் அமைந்துள்ள சோதனை சாவடியில் சென்னை உள்ளிட்ட வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்து கண்காணித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 14 ம் தேதி வரை அந்தப்பணியில் தொடர்ந்து இருந்த அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. பிறகு அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று 19 ம் தேதி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி இருந்துள்ளார். என்பதே தற்போது பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அவசர அவசரமாக மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதோடு கடந்த சிலநாட்களாக வட்டாட்சியர் அலுவலகம் வந்து சென்ற பொதுமக்களையும், அதிகாரிகளையும் கண்டறியும் பணியும் அவசர அவசரமாக துவங்கப்பட்டுள்ளது. சமுகத்தொற்றாக மாறியிருக்குமோ என்கிற அச்சத்தில் அதிகாரிகள் உறைந்துள்ளனர்.
தலைமை செயலகத்தில் கரோனா தொற்று பரவி மூடப்பட்டது போலவே, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகமும் மூடப்பட்டிருப்பது அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.