![congress struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/xjO8JAUtSUWAENjTn-m1g2Q-TDOwNYLiR5jqbAX9MZc/1602006194/sites/default/files/inline-images/zdxgvdsgdgdg.jpg)
உத்திரப்பிரதேச இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மன்னார்குடியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் நூல் நூற்கும் கைராட்டை சுற்றி 'ரகுபதி ராகவ ராஜா ராம்' பாடல் பாடி நூதன வழியில் போராட்டம் நடத்தினர்.
சில தினங்களுக்கு முன்பு உத்திரபிரேதேச மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், இந்திய நாட்டையே தலை குனியசெய்துள்ளது. அந்த கொடுமையைக் கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், சமுக ஆர்வலர்களும் சாதி மத பேதமின்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மன்னார்குடியில் உத்திரப்பிரதேச பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அதிகபட்ச தண்டணையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை தாக்கிய காவல்துறையைக் கண்டித்தும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலை முன்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி 'ரகுபதி ராகவ ராஜா ராம்' பாடல் பாடியும் நூல் நூற்கும் கை ராட்டை சுற்றியும் நூதனப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.