Skip to main content

ஆடி கிருத்திகை; பழனி கோயில் நிர்வாகம் எச்சரிக்கை

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Audi Concept Palani temple administration alert

 

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காகப் பல்வேறு முன் ஏற்பாடுகள் பழனி கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை அன்று அர்ச்சனை செய்வதற்குத் தொலைப்பேசி வாயிலாகப் பதிவு செய்யலாம் என வாட்ஸ்அப் வழியே பரவும் பொய்யான தகவல்களை நம்பி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனப் பழனி கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “0444 - 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம் கேட்பார் அதைச் சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாகத் தெரிவித்துப் பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" எனப் பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாகப் பரப்பப்பட்டு வருவது இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்குத் தெரியவந்தது.

 

அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல்துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைப்பேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்