Skip to main content

அமலாக்கத்துறை சோதனை; ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
adhav Arjuna explained for Enforcement raid

சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை, வேப்பேரி உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று (09.03.2024) சோதனையில் ஈடுபட்டனர். 6 வாகனங்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து இடங்களில் தனித்தனியாக சோதனை நடத்தினர். அதன்படி வேப்பேரியில் ஈ.வி.கே.சம்பத் சாலையில் பிரின்ஸ் கார்டன் 11 வது தளத்தில் மகாவீர் இராணி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அதேபோல் ராஜா அண்ணாமலைபுரத்தில் செல்வராஜ் என்பவருடைய வீட்டில் சோதனையானது நடைபெற்றது.

மேலும் தேனாம்பேட்டையில் கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று (09.03.2024) காலை தொடங்கி இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது. பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எனது தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.

adhav Arjuna explained for Enforcement raid

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதியோடு எனது பயணம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்