
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மூலகாங்குப்பம், கன்னிகோவில் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் ஆங்காங்கே நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு குட்டியுடன் சிறுத்தை நடமாடி வருவதாக பொது மக்கள் நேரில் பார்த்து அலறடித்து ஓடி இருக்கின்றனர். கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வனப்பகுதியில் பார்த்த போது அன்பு என்பவரின் வீட்டில் இருந்து இரண்டு கோழியை பிடித்துக் கொண்டு குட்டியுடன் தாய் சிறுத்தை வனப்பகுதியில் உள்ள பாறையின் மீது இருந்திருக்கிறது. உடனடியாக பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பார்த்திருக்கின்றனர்.
அந்த சிறுத்தை விடியற் காலை வரை இரவு முழுவதும் பாறையின் மீதே இருந்திருக்கிறது. பிறகு அங்கு இருந்து தன் குட்டியை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்று இருக்கிறது. வனத்துறையினர் தற்போது வரை வனப்பகுதியில் சிறுத்தை எங்கிருந்து வருகிறது? எந்த இடத்தில் தங்கி இருக்கிறது? என்று தேடி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பக்கத்துக்கு கிராமத்தில் ஒரு கல்லூரி மாணவி சிறுத்தை தாக்கி உயிர் இழந்த நிலையில் அந்த பகுதி மக்கள் தங்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை தங்களை வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும். உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வனப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வேலி அமைத்து சிறுத்தை இடத்திலிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.