
தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர், பெண்கள் குறித்தும், சைவ - வைனவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் பலரும் எதிர்வினையாற்றி வந்தனர்.
சொந்த கட்சியான திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, 'அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என தனது எதிர்பை பதிவு செய்திருந்தார்.தொடர்ந்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டது திருச்சி சிவா திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி தன்னுடைய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பலருடைய மனதை புண்படுத்தும் வகையில் பேச்சு அமைந்து விட்டது. தலைகுனியும் சூழல் ஏற்பட்டுவிட்டது குறித்து வருந்துகிறேன். நீண்ட கால பொதுவாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.