Skip to main content

“ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தது தி.மு.க.” பிரச்சார கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேச்சு!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழுத் தலைவரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான வி.மருதராஜ் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, “தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவர் ஆட்சியின்போது தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார். 

 

paneerselvam

 

விவசாயத்தில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ. 3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் மக்களின் ஆதரவை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எனவே மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் ஆகும் ஆசை பலிக்காது. தற்போது பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்களை கொண்டது. இங்கு எத்தனை பூகம்பம், புயல் ஏற்பட்டாலும் நம்மையும், நம் தொண்டர்களையும் யாராலும் அசைக்க முடியாது. 


தேர்தல் பிரச்சாரத்தின்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்துக்கு தீ வைத்துவிட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் வன்முறை ஆட்சி செய்து மக்கள் மனதில் தீ வைத்தது தி.மு.கதான். மேலும் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு, சாதி, மத கலவரம் ஆகியவை ஏற்பட காரணமும் தி.மு.கதான். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தது தி.மு.கதான். அந்த தடையை தகர்த்தெறிந்து தமிழர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்தவர் பிரதமர் மோடி. எனவே மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே நீடிக்கும். திண்டுக்கல் தொகுதியில் அவரின் கரத்தை வலுப்படுத்த பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்