Skip to main content

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Published on 12/02/2025 | Edited on 12/02/2025

 

India England ODI Fans in anticipation

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4க்கு 1 என இந்தியா அணி கைப்பற்றியது. இதனையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 6ஆம் தேதி (06.02.2025) தொடங்கியது. இந்த முதல் ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கடந்த 9ஆம் தேதி (09.02.2025) இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.  இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (12.02.2025) பிற்பகல் 01.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஒரு நாள் தொடர் போட்டி இது என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்க உள்ளன. எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒரு நாள் தொடரை அடுத்து இந்த ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அதன்படி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி மார்ச் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்தையும், பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. அதே சமயம் இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.