Skip to main content

“இரட்டை இலைக்கெல்லாம் ஓட்டு விழுகாது” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Minister I. Periyasamy press meet

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவந்தார். அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அமைச்சர் சக்கரபாணி, சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் வேட்பாளர் சச்சிதானந்தம் கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, “கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வரலாறு காணாத வெற்றியை பெற்ற திமுக வேட்பாளர் வேலுச்சாமி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒரு பைசா கூட வீணாக்காமல் திண்டுக்கல் தொகுதி முழுவதும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக இதுவரை செல்போன் டவர் வசதி இல்லாத மலைக்கிராம மக்களுக்கு செல்போன் டவர் வசதி செய்து கொடுத்ததோடு பழனி, மற்றும் திண்டுக்கல் - மதுரை இருப்புப்பாதையில் தரை வழிப்பாலங்கள் கட்டிக்கொடுத்து பொதுமக்களுக்கு சிரமங்களை குறைத்தார். 

நிலக்கோட்டை தொகுதியில் நீர்வரத்து பாதைகளை சீரமைத்து குளங்களுக்கு தனது சொந்த செலவில் தண்ணீர் வரச்செய்தவர் எம்.பி.வேலுச்சாமி. இதுதவிர ஆத்தூர் தொகுதியில் சமுதாய கூடங்கள், நிழற்குடைகள், அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக்கடைகள் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அதிக அளவில் வழங்கியுள்ளார். அவரைப் போல சி.பி.எம். கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தமும் மக்கள் நலன் பணிகளில் அதிகம் ஈடுபடக்கூடியவர். 

இப்போது திண்டுக்கல்லில் போட்டியிடும் வேட்பாளர்களில் மண்ணின் மைந்தராக இருப்பவர் நமது தோழர் சச்சிதானந்தம் ஒருவரே. பிற கட்சிகளான அதிமுக, பா.ம.க.வேட்பாளர் இருவரும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தோழர் சச்சிதானந்தத்தின் குடும்பம் விவசாய குடும்பமாகும். மூன்று முறை காமாட்சிபுரம் ஊராட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சிறப்புடன் நிர்வாகம் செய்தவர். இதுதவிர 24 மணி நேரமும் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடக்கூடியவர். 

இவரைப்போல ஒருவரை தேர்வு செய்தால்தான் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய முடியும். பாராளுமன்ற தேர்தலில் சச்சிதானந்தம் அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு திண்டுக்கல்லிலிருந்து தினசரி சென்னைக்கு ரயில் வசதியும் இதுபோல திண்டுக்கல்லிலிருந்து பழனி மார்க்கமாக ஈரோட்டுக்கு ரயில் வசதியும் செய்து கொடுப்பார்” என்றார். 

அப்போது நிருபர்கள் நத்தம் விசுவநாதனும், திண்டுக்கல் சீனிவாசனும் இரட்டை இலை சின்னத்தில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிடுகிறார். அமோக வெற்றி கிடைக்கும் என கூறுகின்றனர். அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி கேட்டனர். “இரட்டை இலையை காண்பித்து ஓட்டு வாங்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. மக்கள் அனுதினமும் மக்களுக்கு யார் நல்லாட்சி செய்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார்கள். இரட்டை இலையை வேண்டுமானால் போர்வையில் பிரிண்ட் செய்து போர்த்திக்கொள்ளலாமே தவிர வெற்றி பெறலாம் என்பதெல்லாம் பகல் கனவு என்றார். மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழக மக்களிடமிருந்து 6 லட்சம் கோடியை வரியாக வசூல் செய்துவிட்டு 1.5லட்சம் கோடியை திருப்பி நமக்கு தந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இரட்டை இலைக்கெல்லாம் ஓட்டு விழுகாது என்று” கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்