
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோம் என்பது பட்டவர்த்தனமாக தெரியும். அதுகுறித்து நோட்டீஸ் கொடுக்கிறோம். வீடு வீடாகச் சென்று தெளிவுபடுத்துகிறார்கள். அதன் மூலம் தான் வெற்றி இலக்கை அடையமுடியும். இதில் அதிமுகவிற்கு சவால் விடவேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது. அவர்களே அந்த நிலையில் இல்லை.
சீமான் அரசியல் இயக்கம் நடத்துகிறார். ஜனநாயகத்தில் கட்சிகளை நடத்துகிறவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள். அவரது கட்சி சார்பில் சீமான் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” எனக் கூறினார்.
இதன் பின் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, “ஆட்சிக்கு வந்த உடன் முதல்வர் போட்ட முதல் கையெழுத்து ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ. 4000 வழங்க வேண்டும் என்பது தான். பொங்கல் வந்த பொழுது கூட அமைச்சர்கள் முதல்வரிடம் சொன்னோம். இப்பொழுது இருக்கும் நிலைமைக்கு சிரமமாக இருக்கும். ஒன்றும் வேண்டாம். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை போதும் என்று சொன்னோம். அதற்கு முதல்வர், அரிசி, சர்க்கரை மட்டும் கொடுக்கலாம் என்று சொல்கிறீர்கள் அதில் முந்திரி, ஏலக்காய் எல்லாம் போட்டால் தானே பொங்கல் ஆகும் எனச் சொன்னார். நாங்கள் சொன்ன எதையும் கேட்கவில்லை. பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கினார்” எனப் பேசினார்.