
வேலூரில் காவல் நிலையத்தில் ஆண் காவலர் ஒருவர் நிர்வாணமான நிலையில் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம், விருதம்பட்டு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அருண் கண்மணி. நேற்று மாலை அருண் கண்மணி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகன ஓட்டுநர் சேட்டு என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தான் காவலர் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி அருண் கண்மணி சேட்டுவை அருகில் இருந்த கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது காவலர் அருண் கண்மணி மதுபோதையில் இருந்துள்ளார். பணியில் இருந்த பெண் காவலர் சேட்டு மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் காவலர் அருண் கண்மணி, தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்து பெண் காவலர் முன்பு நின்று தகராறு செய்துள்ளார். இதனால் அலறியடித்துக் கொண்டு பெண் காவலர் வெளியே ஓடினார். உடனடியாக அங்கு வந்த ஆய்வாளர் மற்றும் காவலர்களிடம் இது குறித்து தெரிவித்தார்.
அவர்கள் அருண் கண்மணிக்கு உடைகளை அணிவித்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குகே காவலர் அருண் கண்மணி கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சேட்டு, பெண் காவலர் உள்ளிட்டோர் அளித்த புகாரின் பேரில் காவலர் அருண் கண்மணி மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலரே குடிபோதையில் காவல் நிலையத்தில் நிர்வாணமாக ஆடைகள் இன்றி தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.