Skip to main content

“பட்டியலின மக்கள் கேட்கிறார்கள்” - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

"Listed people are asking" Kejriwal's question to the central government

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும்  இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

 

கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகில் செங்கோல் ஒன்று நிறுவப்பட உள்ளது.

 

தொடர்ந்து திமுக, விசிக, மதிமுக உட்பட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் திறப்பு விழாவினை புறக்கணிப்பதாகக் கூட்டாக அறிவித்துள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே மோடி அரசு சீர்குலைத்துவிட்டது; குடியரசுத் தலைவர் ஒப்புதலின்றி நாடாளுமன்றமே செயல்பட முடியாது என்ற நிலை உள்ளபோது, அவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றத்தை திறப்பது அரசியலமைப்பை மீறும் செயல்" என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “ஸ்ரீராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மோடி அழைக்கவில்லை. புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டவும் ராம்நாத் கோவிந்தை மோடி அழைக்கவில்லை. இப்போது தற்போதைய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கைகளால் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவைக் கூட செய்யவில்லை. நாடு முழுவதும் உள்ள எஸ்.சி., எஸ்.டி. மக்கள், எங்களை தீய சகுனமாகக் கருதுகிறீர்களா என்று கேட்கிறார்கள். அதனால்தான் எங்களை அழைக்கவில்லையா?” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்