Skip to main content

“படிப்பறிவற்ற பிரதமர்” - கெஜ்ரிவாலின் கருத்துக்கு வெகுண்டெழுந்த குஷ்பு

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Khushboo lashed out at Kejriwal's comment as an "illiterate prime minister"

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என்ற அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இது குறித்து கருத்து தெரிவித்து இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை கடுமையாகச் சாடி இருந்தார். அவர் கூறுகையில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் போது ஊழலை ஒழிக்க ரூ.2000 அறிமுகம் செய்யப்படுவதாக கூறினர். தற்போது ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதன் மூலமும் திரும்பப் பெறுவதன் மூலமும் ஊழல் ஒழியும் என்கின்றனர். இதன் காரணமாகவே பிரதமருக்கு கல்வி அறிவு வேண்டும் என கூறுகிறோம். படிப்பறிவு அற்ற பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அது பிரதமருக்கு புரியப் போவதில்லை. இதனால் மக்கள் தான் அவதிப்படுகிறார்கள்” என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்துக்கு பதில் அளித்துள்ள பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, “ஆணவத்தின் முழு உருவம். அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஒரு தன்மை இருக்க வேண்டும். நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி ஏற்கத்தக்கது அல்ல” எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்