Skip to main content

அண்ணாமலைக்கு தனது ஸ்டைலில் பதிலளித்த ஜெயக்குமார்!

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Jayakumar responded to Annamalai in his own style!

 

அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக அவர் 100வது தொகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று முன்தினம் (07-11-23) நடைப்பயணத்தை மேற்கொண்டார்.  

 

அதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்துள்ளார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளார்கள். ஆனால், இந்துக்கள் நாம் அறவழி வாழ்க்கை வாழ்கிறோம். 

 

இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும். மேலும், கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சி வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் முன்பும் அகற்றி காட்டுவோம். சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தலைவர்களின் புகழை போற்றுவது தான் மாண்பும், மரியாதையும். தலைவர்களின் புகழை சிதைக்கும் வகையில் எந்தவித கருத்துகள் கூறினாலும், அது முகம் சுழிக்கும் வகையில் தான் இருக்கும். தலைவர்களை சீண்டினால் அது அண்ணாமலைக்கு தான் பின்னடைவு” என்று கூறினார். அப்போது அவரிடம் அண்ணாமலை கூறிய இந்து சமய அறநிலையத்துறை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வற்றி செத்ததாம். அதனால், அவர் வரட்டும் பிறகு பார்க்கலாம்” என்று தனது பாணியில் பதிலளித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Next Story

அழைப்பு விடுத்த அ.தி.மு.க.; தொல். திருமாவளவன் எம்.பி. பதிலடி!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
ADMK made the call thol Thirumavalavan MP Retaliation

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையொட்டி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி வி.சி.க. உடன் தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தது.

ADMK made the call thol Thirumavalavan MP Retaliation

இத்தகைய சூழலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “அ.தி.மு.க. கூட்டணிக்கு வி.சி.க. வந்தால் அதிக இடங்கள் கிடைக்கும். வி.சி..க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. 3 மக்களவைத் தொகுதிகளை கேட்டு வருகிறது. தி.மு.க. 3 தொகுதிகளை தர மறுப்பதால் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத சூழல் நிலவி வருகிறது. இதனால் தி.மு.க. கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம். அவ்வாறு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். அ.தி.மு.க. கூட்டணிக்கு வி.சி.க. வந்தால் வி.சி.க.வுக்குத்தான் லாபம். வி.சி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் கூடுதல் தொகுதி கிடைக்கும். தி.மு.க. கூட்டணியில் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி இருந்தால் அதிமுகவுக்கு வரலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தென் மாநில வி.சி.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (05.03.2024) நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநில நிர்வாகிகளும், புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் இணையம் வாயிலாக கேரள மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தெலங்கானாவில் பத்து நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த கூட்டணியில் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஆறு இடங்களிலும், கேரளாவில் இடுக்கி உட்பட மூன்று தொகுதிகளிலும் விசிக போட்டியிடுகிறோம்.

ADMK made the call thol Thirumavalavan MP Retaliation

எங்கள் மீதுள்ள கரிசனத்துக்கும் அக்கறைக்கும் ஜெயக்குமாருக்கும் அ.தி.மு.க.வுக்கும் வி.சி.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களை பொறுத்தவரை இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் முதன்மையானது. தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு என்கிற அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க முயற்சிக்கப் போவதில்லை. நாட்டு நலன் கருதி மக்கள் நலன் கருதி இந்தத் தேர்தலை ஒரு கருத்தியல் போராக அணுகுகிற காரணத்தினால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பயணித்து வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவதற்கு வாய்ப்பில்லை. போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை விரும்பியதைப் போன்று இருக்கலாம். விருப்பத்திற்கு மாறாகவும் இருக்கலாம். எங்கள் விருப்பத்தைவிடவும் பாஜகவிடம் இருந்து இந்த நாட்டை காப்பற்ற வேண்டும் என்பதே மேலானதாக இருக்கிறது என நம்புகிறோம். அதன் அடிப்படையில் எங்கள் முடிவுகள் இருக்கும்” எனத் தெரிவித்தார்.