
கோவையில் இன்று பகலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கி கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன.
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தை தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு.
உடனடியாக தமிழக முதலமைச்சர் அரசின் அடிப்படை கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.