Skip to main content

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீசப்பட்ட கல்லூரி மாணவி... தெலுங்கானாவில் மீண்டும் பரபரப்பு!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

shocking incident in telungana

 

கல்லூரி மாணவி ஒருவர் ஐந்து பேரால் கொடூரமாக தாக்கப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாக வீசி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தெலுங்கனா மாநிலம் ஹைதராபாத்தில் கல்லூரி மாணவி ஒருவர் படித்துக்கொண்டே தனியார் மருத்துவமனை ஒன்றின் மருந்தகத்தில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று (10.02.2021) மாலை பணிமுடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட மாணவி, அவரது தாய்க்குத் தான் புறப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு வந்து சேரவில்லை. சில மணிநேரம் கழித்து, முன்பின் தெரியாத நபர்கள் தன்னை ஆட்டோவில் கடத்திச் செல்வதாக மாணவி தாயிடம் செல்ஃபோனில் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.

 

இதனால் பதற்றமடைந்த மாணவியின் தாய், போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க, போலீசார் மாணவியின் செல்ஃபோன் எண்ணைக்கொண்டு அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். மாணவி வீட்டிற்கு செல்ல ஆட்டோ ஏறிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு காயங்களுடன் குத்துயிரும் குலையுயிருமாக வீசப்பட்டுக் கிடந்த மாணவியைக் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

 

shocking incident in telungana

 

வீட்டிற்கு செல்ல ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோ ஓட்டுநர் அவரது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து மாணவியைத் தாக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, வன்கொடுமை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான ஆட்டோ ஓட்டுனரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

 

கடந்த ஆண்டு இதேபோல் தெலுங்கானாவில் தனியே சென்ற இளம்பெண்ணின் இருசக்கர வாகனம் (ஸ்கூட்டி) பழுதான நிலையில், பஞ்சர் ஒட்ட உதவுவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு இளம்பெண், கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், போலீஸ் என்கவுண்டர் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இந்த வன்கொடுமை சம்பவம் தெலுங்கானாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்