தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சரக்கு விமானம் மூலமாக டெல்லியிலிருந்து கொல்கத்தாவிற்குப் பயணம் மேற்கொண்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லியிலிருந்து ஐபேக் அமைப்பின் தலைவரான பிரசாந்த் கிஷோர் சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா சென்றதாகச் செய்திகள் வெளியாகின. கரோனா வைரஸை எதிர்கொள்ளும் விவகாரத்தில் மேற்குவங்க அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கைத் தீர்த்துவைப்பதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உதவி செய்ய அவர் கொல்கத்தா சென்றதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் விமானச் சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு விமானம் மூலமாக அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தத் தகவல்களை பிரசாந்த் கிஷோர் தரப்பு மறுத்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.