Skip to main content

தொடரும் படுகொலைகள்... வெளியேறும் தொழிலாளர்கள் - காஷ்மீரில் களமிறங்கும் என்.ஐ.ஏ!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

nia

 

ஜம்மு காஷ்மீரில், இம்மாத தொடக்கத்திலிருந்தே தீவிரவாதிகள் குடிமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இதுவரை 11 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.10.2021), பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

இந்த தொழிலாளர்களின் கொலைக்குப் பொறுப்பேற்றுள்ள லஷ்கர்-இ-தொய்பா சார்பு இயக்கமான ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பயங்கரவாத குழு, ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறுமாறு புலம்பெயர் தொழிலாளர்களை எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில் புலம்பெயர் தொழிலாளர்களும் தங்கள் உயிருக்குப் பயந்து ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, பிரிவினைவாதிகளுடன் தொடர்புடைய 900த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்புப் படைகள் தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதில், பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதிகள் சிலரும் பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் பிறப்பிக்கவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் பொதுமக்களைக் கொலை செய்வதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்