Skip to main content

பா.ஜ.க இளைஞரணி தலைவர் சுட்டுக்கொலை; விசாரணையில் பரபரப்பு தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
BJP youth leader incident happened in madhya pradesh

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோனு கல்யாணே (35). இவர் இந்தூர் பகுதி பா.ஜ.க இளைஞரணி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், சிமன்பாக் சதுக்கம் பகுதியில் பா.ஜ.க சார்பில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட்டத்தை முன்னிட்டு போஸ்டர் ஒட்டுவதற்காக மோனு கல்யாணே நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்து தனது நண்பர்களுடன் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார். 

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் வந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மோண்டு கல்யாணேவை சரமாரியாக சுட்டு தள்ளினர். இதில், மோனு கல்யாணே ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். மோனு கல்யாணேவை சுட்ட நபர்களைப் பிடிக்க அவரது நண்பர்கள் முயன்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து, படுகாயமடைந்த மோனு கல்யாணேவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோனு கல்யாணேவுக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் அர்ஜுன் பத்ரோட் மற்றும் பியூஷ் பத்ரோட் ஆகியோருக்கும் இடையே ஏற்கெனவே முன்பகை இருந்ததாகவும், இதனால் அவர்கள் இருவரும் மோனு கல்யாணேவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாகவும் தெரியவந்தது. மேலும், தப்பிச் சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதனிடையே, மோனு கல்யாணேவின் ஆதரவாளர்கள், கொலையாளிகளில் ஒருவரின் வீட்டை அடித்து நொருக்கியும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் தீ வைத்து எரித்ததால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பா.ஜ.க இளைஞரணி தலைவரை துப்பாக்கியால் சுட்டுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடிநீரில் கழிவுநீர் கலந்து சிறுவன் உயிரிழப்பு; சென்னை மாநகராட்சி விளக்கம்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Boy lose their live after drinking water mixed with sewage; Description of Corporation

சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை அபீத் காலனி பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததாக 11 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிறுவனின் சகோதரியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட தண்ணீரை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்ற வருகிறது. துர்நாற்றத்துடன் குடிநீர் வருவதாக ஏற்கனவே அந்த பகுதி மக்கள்  புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மழைநீர் செல்வதற்கு இடையூறாக சுவர் கட்டியதால் குடிநீரில் கழிவுநீர் கலந்தது தெரியவந்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் செல்வதற்கு இடையூறாக சுவர் கட்டப்பட்டதால் கழிவுநீர் செல்வது தடுக்கப்பட்டு அருகே உள்ள வளாகத்தின்  கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவு நீர் கலந்துள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மனைவியை கத்தியால் குத்திய கணவன்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Husband stabs wife in Tiruppathur

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அடுத்த கல்லுகுட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாசம் மகன் பிரவீன் (32). இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகள் நந்தினி (28) என்பவருக்கும் பிரவீனுக்கும் திருமணம் நடைபெற்று குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவனிடமிருந்து பிரிந்து நந்தினி தனது அம்மா வீட்டில் தங்கி திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டையில் இயங்கும் ஸ்ரீராம் பைனான்ஸில் டாக்குமெண்ட் ஸ்டாப்பாக வேலையும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவன் பலமுறை தனது மனைவியை தன்னுடன் வாழ அழைத்தும் வராத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரவீன், மனைவி வேலை செய்யும் இடத்திற்கே சென்று தனது மனைவியை தனியாக அழைத்து தன்னிடம் வர அழைத்துள்ளார். ஆனால், மனைவி வர மறுத்து அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமானவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவின் உடம்பில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இதனால் மனைவி அலறி உள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு நந்தினியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தன் மனைவியை குத்தியதால் கணவன் பிரவீனுக்கும் கையில் காயம் ஏற்பட்டதால் அங்கேயே அமர்ந்திருந்தார். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் பிரவினை அழைத்து வந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்தனர். கருத்து வேறுபாடு காரணத்தால் கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.