Skip to main content

12 வயது என்ற வரம்பு நியாயமானதா? - நிர்பயாவின் தாயார் வேதனை

Published on 22/04/2018 | Edited on 22/04/2018

இந்தியாவில் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து வரும் சூழலில், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது கத்துவா சிறுமி பாலியல் வன்புணர்வு சம்பவம். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும் கோரி குரல்கள் எழுப்பப்பட்ட நிலையில், இதுதொடர்பான அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் குறைப்பது தொடர்பான பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, போக்ஸோ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர இருப்பதாகவும், அதன்படி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வு செய்தால் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான சட்டத்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்தார்.

 

 

இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நிர்பயாவின் தாயார் இதுகுறித்து விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், ‘12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் குற்றத்திற்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படுவது பாராட்டுக்குரியது. ஆனால், வயதில் மூத்தவர்கள் என்றால் என்ன செய்வது? வன்புணர்வை விட மிகக் கொடுமையான வலி என்று இந்த உலகில் வேறெதுவுமே கிடையாது. இந்தக் குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தூக்கிலிடப்பட வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் 20 வயது தலித் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published on 15/12/2023 | Edited on 16/12/2023
Again a Nirbhaya incident; Tragedy of 20-year-old woman in bus

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய், பவன், அக்‌ஷய் சிங்கிற்கு டெல்லி திஹார் சிறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி  (20/03/2020) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்ற கொடூரச் சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதி இரவு, உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது கான்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு 20 வயது தலித் பெண் ஒருவர் பயணித்துள்ளார். இவர் பேருந்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட கேபினில் அமர்ந்திருந்துள்ளார். பேருந்திற்குள் சில பயணிகளும் இருந்துள்ளனர். அந்த சமயம் இந்த கேபினுக்குள் ஆரிப் மற்றும் லலித் என அடையாளம் காணப்பட்ட டிரைவர்கள், ஓடும் பேருந்தில் அந்த பெண்னை இரண்டு டிரைவர்களும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது பெண் கூச்சலிட்டதால் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லலித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆரிப்பை பேருந்தில் இருந்த பயணிகள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஆரிஃப் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய லலித்தை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

உ.பியில் தொடரும் அவலம்; இரண்டு சிறுமிகள் மர்ம மரணம்!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

unnao incident

 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பட்டியலின சிறுமிகள் மூவர், கால்நடைகளுக்கு உணவு சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள வயல்வெளியில் மூவரும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

மருத்துவமனையில் அவர்களைப் பரிசோதித்தபோது, இருவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. ஒரு சிறுமி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் மூன்று சிறுமிகளின் கைகளும் கட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அம்மாநில காவல்துறை இதனை மறுத்துள்ளது. மேலும் சிறுமிகளுக்கு விஷம் அளிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர், "முதல்கட்ட தகவலின்படி, சிறுமிகள் புல் வெட்ட சென்றிருந்தனர். விஷத்தின் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, கண்ணால் பார்த்தவர்கள் மற்றும் மருத்துவரின் கருத்துப்படி, அந்த இடத்தில் நிறைய நுரை காணப்பட்டது. விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம். முதல்கட்ட தகவலின்படி உடல்களில் எந்தக் காயமும் இல்லை. விசாரணைக்கு 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மருத்துவமனையில் உள்ள சிறுமிக்கும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.