
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இருவரும் முதல் முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி, 'தேவர் ஜெயந்தி'யாகக் கொண்டாடப்படும்.
அதன்படி நாளை (30 -ஆம் தேதி) நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக, இன்று மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அதேபோல, தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் முடிவு செய்திருக்கிறார். எடப்பாடி செல்லும் அதே விமானத்தில் மு.க.ஸ்டாலினும் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே விமானத்தில் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் பயணம் செய்ய இருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள் அரசியலை உற்றுக் கவனித்து வருபவர்கள்.