Skip to main content

இந்தியாவிலும் உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவம் இருந்தால் ராஜபக்சேவை கைது செய்து தண்டனை வழங்க முடியும்! ராமதாஸ்

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
rajapakse

 

இந்தியாவிலும் உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்தியாவில் அத்தத்துவம் நடைமுறையில் இருப்பதாக வைத்துக் கொண்டால்,  இலங்கைப் போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தால் அவரை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க முடியும் என்று  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்த அவரது அறிக்கை:’’இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் என்ன நடந்து விடக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அஞ்சிக் கொண்டிருந்தார்களோ, அது நடந்து விட்டது. போர்க்குற்றவாளிகள் மீதான போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் நடைமுறைகளை இலங்கை அரசு குழி தோண்டி புதைத்து விட்டது.

 

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்; அந்த விசாரணையில் பன்னாட்டு சட்ட வல்லுனர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும்,  அதன்மீது இலங்கை நடவடிக்கை எடுக்காத நிலையில், மேலும் 2 ஆண்டுகள் காலநீட்டிப்பு வழங்கி புதிய தீர்மானம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் தற்போதைய நிலை தொடர்பாக விவாதிக்க ஐநா. மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடர் வரும் 26 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 23ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக  ஐநா மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான்  பேரவையின் தீர்மானத்தை செயலாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அப்பட்டமாக கைவிட்டு விட்டதாக குற்றஞ்சாற்றியுள்ளார்.

 

ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு, பன்னாட்டு சட்ட விதிகளின் கீழ் குற்றவாளிகளை தண்டிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்ப டவில்லை. வடக்கு கிழக்கில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை மக்களிடம் திருப்பி அளிப்பதிலும் முன்னேற்றம் இல்லை. இலங்கையில் நிலைமாற்ற நீதிக்கான (Transitional Justice) செயல்திட்டம் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இதற்கான காலத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை. இது தொடர்பாக முன்பு கூறப்பட்ட நடவடிக்கைகள் எதிலும் முன்னேற்றம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கச் செய்வதற்கான திட்டமும் வெளியிடப்படவில்லை. உண்மை அறியும் ஆணையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் இல்லை. 2012 வெளிக்கடா சிறையில் 27 பேர் படுகொலை. 2006-ல் முத்தூரில் 17 தன்னார்வப் பணியாளர்கள் கொலை. 1996-ல் குமாரபுரத்தில் 23 தமிழர் படுகொலை, 2009-ல் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை போன்ற குற்றங்களிலும் நீதிவழங்க இலங்கை முன்வரவில்லை என குற்றஞ்சாற்றியுள்ளார்.

 

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் அரக்கத்தனமாக இனப்படுகொலை செய்யப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அதற்கான அறிகுறிகள் கூட தென்படாதது தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. முதலில் போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை என்று கூறி விசாரணைக்கு மறுத்து வந்த இலங்கை  அரசு, இப்போது போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு போர்க்குற்றவாளிகளை  தண்டிக்க முன்வராதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

 

போர்க்குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், அதற்கான மாற்று வழிகளை ஆராய்வது தான் நியாயமானதாக இருக்கும். அதைத் தான் ஐ.நா. மனித உரிமை ஆணையரும் கூறியிருக்கிறார். உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவம் எந்தெந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளதோ, அந்நாடுகள் போர்க் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர் கோரியுள்ளார். இலங்கைப் போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது எந்தெந்த நாடுகளில் உள்ளார்களோ, அவர்கள் மீது அந்தந்த நாடுகளில் வழக்குத் தொடர்ந்து விசாரித்து தண்டிப்பது தான் உலகளாவிய நீதிவழங்குதலாகும். உதாரணமாக இந்தியாவில் அத்தத்துவம் நடைமுறையில் இருப்பதாக வைத்துக் கொண்டால்,  இலங்கைப் போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தால் அவரை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க முடியும். அதற்கு வசதியாக இந்தியாவிலும் உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவத்தை (universal jurisdiction) நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அதுமட்டுமின்றி, ஈழத்தமிழர் படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கைக்கு வெளியில் பன்னாட்டு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது, இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே ஐ.நா மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முன்முயற்சிகளை  உலக நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ’’

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.